மணிப்பூர் ஏன் பற்றி எரிகிறது தெரியுமா?
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேரும், தீ வைப்பு சம்பவத்தில் சிக்கி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் மணிப்பூர் மாநில சட்டசபையில் நிலசீர்திருத்தம், மணிப்பூர் மக்கள் பாதுகாப்பு உள்பட 3 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு 3 பழங்குடியின மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து 12 மணி நேர வேலைநிறுத்தம் அறிவித்தன.
இந்நிலையில், மணிப்பூர் மாநில குடும்ப நலத்துறை அமைச்சரான புங்ஜபாங் டோன்சிங்கின் வீடு உட்பட சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு நேற்று மாலை மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர்.

போலீஸ் சந்தேகம்...
போராட்டம் நடத்திய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தீவைப்பு சம்பவங்களுக்கு பின்னணியில் இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றவாளிகளை அவர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

3 பேர் பலி...
இதற்கிடையே மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் டவுன் பகுதியில் நேற்று மாலை திடீரென வன்முறை ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர் என்றும், ஒருவர் தீ வைப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது.

5 பேர் காயம்...
மேலும், இந்த வன்முறை சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் இருவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னர்லைன் பெர்மிட்...
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்த புதிய மசோதா. இதன்படி, இன்னர்லைன் பெர்மிட் உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டும் தான், மணிப்பூருக்குள் வந்து செல்ல முடியும்.

அதிருப்தி...
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு சட்டசபையில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் போராட்டக்காரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதன் எதிரொலியாகவே இந்தத் தீ வைப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஊரடங்கு...
வன்முறை சம்பவங்களால், மணிப்பூரின் தெற்கு பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications