பாகிஸ்தான் தேவாலய மனித வெடிகுண்டுத் தாக்குதல்: பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம்
நேற்று, பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் தேவாலத்தில் பிரார்த்தனை செய்வதற்காக சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். பிரார்த்தனை முடிந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்ட போது தீவிரவாதிகள் அடுத்தடுத்து இரு இடங்களில் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி சுமார் 78 பேர் வரை பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். மேலும், படுகாயமடைந்த 130க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகையே உலுக்கிய இந்த தேவாலயத் தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘பெஷாவர் தேவாலயத்தில் மனித வெடிகுண்டு நடத்தியுள்ள தாக்குதல் சம்பவம், தீவிரவாதிகளின் மற்றொரு கொடூர செயலாகும். வழிபாட்டு தலத்தில் நடந்த இந்த தாக்குதலில் ஒன்றும் அறியாத அப்பாவிகள் வன்முறைக்கு பலியாகி இருப்பது வருத்தம் அளிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.