அப்படியே உருகிய இமயமலை.. கேதார்நாத் கோவில் அருகே பிரமாண்ட பனிச்சரிவு.. வெளியான திக்திக் வீடியோ!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் பின்புறம் இமயமலையில் இன்று பிரமாண்டமான பனிச்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம், பொருட்சேதம் இல்லாத நிலையில் அதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தான் கேதார்நாத். இந்த கோவில் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத்தில் இமயமலையின் வடக்கு பகுதியில் கார்வால் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்துள்ளது.
இந்தியாவின் 12 சோதிலிங்க சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். கோவிலில் சிவபெருமானை தரிசனம் செய்யலாம். இங்கு கடுமையான வானிலை நிலவும். இதனால் கோவிலுக்கு ஏப்ரல் முதல் தீபாவளி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நீங்கெல்லாம் மனுஷங்க தானா? லட்டு வாங்கித் தர்றேன்.. 6 வயது சிறுமியிடம் அத்துமீறிய 60! ஷாக்கான சேலம்!
பனிச்சரிவு
இமயமலையில் கோவில் அமைந்துள்ளது என்பதால் வெப்பமான காலங்களில் பனிச்சரிவு அடிக்கடி ஏற்படும். இருப்பினும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் யாத்திரை சென்று சிவனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று காலை கேதார்நாத் கோவில் அருகே திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது கோவிலின் பின்புறம் உள்ள மலையில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவால் பனிக்கட்டிகள் மேலிருந்து வேகமாக கீழே தாழ்வான பகுதியை நோக்கி வந்து சோராபரி ஏரியில் விழுந்தது.
கோவில் சேதம் இல்லை
இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்படவில்லை. கோவிலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி கோவில் கமிட்டியின் தலைவர் அஜேந்திர அஜய் கூறுகையில், ‛‛இமயமலை பகுதியில் இன்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது. ஆனால் கேதார்நாத் கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை'' என்றார்.
வெளியான வீடியோ
இதற்கிடையே கேதார்நாத் கோவிலின் பின்புறம் உள்ள இமயமலை தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவு தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். கேதார்நாத் கோவிலை சுற்றி பனிப்பாறைகள் சரிவது என்பது முதல் முறையல்ல. அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன.
10 நாளில் 2வது முறை
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட செப்டம்பர் 22ல் கோவிலுக்கு பின்னால் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சோராபரி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடுமையாக பனிச்சரிவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது 2வது முறையாக பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டது. சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக கோதார்நாத் செல்லும் ருத்ரபிரயாக்கில் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.