ஒபாமாவுக்கு விருந்து வெச்ச செலவை சொல்ல முடியாது... உள்துறை அமைச்சகம் அதிரடி!
மும்பை: அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்தியா வருகை தந்த போது மத்திய அரசு எவ்வளவு செலவு செய்தது என்பதை தெரிவிக்க முடியாது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் கல்காலி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஒபாமா வருகை தந்த போது மத்திய அரசு செலவிட்ட தொகை விவரங்களைக் கேட்டிருந்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான விவரங்களையும் அவர் கோரியிருந்தார்.
ஆனால் உள்துறை அமைச்சகமோ அனிலின் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்று மறுத்துவிட்டது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சக மூத்த அதிகாரி ரோகித் ரதீஷ் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அப்படி வரவழைக்கப்படுகிற விருந்தினர்களுக்கு ஒரே மாதிரியான தொகை செலவிட முடியாது.
இதுபோன்ற வெளிநாட்டுத் தலைவர்கள் தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்தும் போது அந்நாடுகளுடனான உறவுகள் பாதிக்கப்படும் என்றார்.
ஆனால் சமூக ஆர்வலர் அனிலோ, பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த போது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்போம் என்று உறுதியளித்தது. ஆனால் அளித்த வாக்குறுதியை தற்போது அந்த கட்சி காப்பாற்றவில்லை என்று சாடியுள்ளார்.