சனாதான தர்மத்தை பாதுகாத்து, பரப்புவதில் மோடி அரசு முனைப்புடன் செயல்படும்.... அமித்ஷா சர்ச்சை பேச்சு
மதுரா: சனாதான தர்மத்தை பாதுகாத்து அதை பரப்புவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு வளமான இந்தியாவை உருவாக்குவதுடன் இந்த தேசத்தின் ஆன்மீக கருத்துகளை உலகம் முழுவதும் பரவுவதற்காகவும் பாடுபடும்.
சனாதான தர்மங்களை பரப்புவோம்
இந்தியாவின் கலாசாரத்தையும் சனாதன தர்மம் எனப்படும் இந்துயிச கொள்கைகளையும் பாதுகாப்பதற்கான, பரப்புவதற்கான நடவடிக்கைகளை முனைப்புடன் மோடி அரசு மேற்கொள்ளும்.
அரசியலில் மதம்
கடந்த காலங்களில் அரசியல் இருந்து மதம் என்பது ஒதுக்கி வைக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் கங்கை நதியில் நடைபெற்ற மாலைநேர வழிபாட்டில் கலந்து கொண்டார்.
கங்கை ஆரத்தி
கங்கை உட்பட நாட்டின் அனைத்து நதிகளையும் தூய்மைப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாகவே சர்வதேச யோகா நாளை ஐநா சபை பிரகடனம் செய்தது.
காப்புரிமை இல்லை...
இந்து கலாசாரமும் சனாதன தர்மமும் உலகத்தில் உள்ள அனைவருக்குமானது. இதில் நமக்குதான் காப்புரிமை என்று எதுவும் இல்லை... பிறநாட்டவர் இங்கு வந்து அதை கற்றுக் கொள்ளலாம்.
நான் டெல்லியில் வசித்தாலும் குஜராத்தைச் சேர்ந்தவன். குஜராத்துக்கும் கிருஷ்ணரின் பிருந்தாவனுக்கும் தொடர்பு உள்ளது. பிருந்தாவனுக்கு வரும்போதெல்லாம் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
சர்ச்சை
சனாதான தர்மம் என்பது பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துவதை உள்ளடக்கியதாகும். ஆகையால் மனிதர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான சனாதான தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பது நாத்திகம் பேசும் முற்போக்கு சக்திகளின் கருத்து.
இந்த நிலையில் சனாதான தர்மம், இந்துத்துவா கொள்கைகளை மோடி அரசு பகிரங்கமாக முன்னெடுத்துச் செல்லும் என பாஜக தலைவர் அமித்ஷா பேசியுள்ளது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.