முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதி வாகன நிறுத்துமிட பிரச்சினை: உம்மன் சாண்டி கருத்து
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கார் நிறுத்துமிடம் அமைக்கும் இடத்தில் மக்கள் விருப்பத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி தெரிவித்தார்.
முல்லை பெரியாறு அணையின் நீர்த்தேக்க பகுதியான தேக்கடி ஆனவச்சாலில், பெரியார் புலிகள் காப்பகம் சார்பில் ரூ.4.5 கோடி மதிப்பில் வாகன நிறுத்தம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டது. அந்த இடத்தை சர்வே செய்ததில் அது முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி எனவும், அதற்கான ஆண்டு குத்தகை பணத்தை தமிழக பொதுப்பணித்துறை செலுத்தி வருவதால் இதுகுறித்த அறிக்கையை கேரளா வழங்க தமிழக அரசு கேட்டு இருந்தது.
மேலும் இந்த வாகனம் நிறுத்தும் இடத்திற்கு தேக்கடி, குமுளி பகுதியை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது. அப்போது கம்யூனிஸ்டு கட்சியினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பணி மீண்டும் நிறுத்தப்பட்டது.
தேனி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள கேரள எல்லைக்குட்பட்ட முருக்கடி என்ற இடத்தில் ரூ.85 லட்சம் மதிப்பில் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தை கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று திறந்துவைத்தார். மேலும் புதிய கட்டிடம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
புலிகள் சரணாலய பகுதியான தேக்கடி ஆனவச்சால் பகுதியில் வனத்துறையினர் கார் நிறுத்துமிடம் குறித்து மக்கள், வணிகர்கள் எதிர்ப்பு குறித்தும், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி. ஆகியோரின் கருத்துக்களை மதிக்கிறேன். வாகன நிறுத்துமிடம் அமைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ளாட்சி அமைப்பினர், அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
அந்த கூட்டத்தில் பொதுமக்கள் எடுத்து கூறும் கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். மத்திய வன உயிரின ஆணைய அறிவுரையின்படி தான் இந்த வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு சிரமங்கள் இருந்தால் நிச்சயமாக அது விவாதிக்கப்பட்டு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.