மும்பையை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் வாட்டி வதைக்கும் குளிர்- தீமூட்டி குளிர் காயும் மக்கள்!
மும்பை: மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் குளிர் நிலவுகிறது. உறைந்து போகும் அளவுக்கு குளிர் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மும்பையில் இந்த ஆண்டு குளிர்காலம் வழக்கத்தை விட சற்று தாமதமாகவே தொடங்கியது.
எனினும் கடந்த சில நாட்களாக பொதுமக்களை குளிர் வாட்டி வதைத்து வருகிறது.
நடமாட விடாத பனி:
குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள் பனியில் இருந்து தங்களை காத்துக்கொள்வதற்காக கம்பளி ஆடைகளை அணிந்தே வெளியே வருகின்றனர்.
குளிர் காயும் மக்கள்:
மேலும் நடைபாதைகளில் வசிக்கும் மக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து தங்களை காத்துக்கொள்கின்றனர்.மும்பையில் நேற்று கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பனியின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இந்த குளிருக்கு 6 பேர் மும்பையில் உயிரிழந்துள்ளனர்.
கொட்டித் தீர்க்கும் குளிர்பனி:
கொலபாவில் நேற்று 17.2 டிகிரி செல்சியசும் நேற்று முன்தினம் 17.8 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகி இருந்தது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு:
மும்பையை பொறுத்தவரை கடந்த 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி 10.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்ததே மிக குறைந்தபட்ச வெப்பநிலையாக கருதப்படுகிறது.