படேல் இல்லாவிட்டால் 'கிர்' சிங்கத்தை பார்க்க பாக். தான் போக வேண்டி இருந்திருக்கும்- மோடி
அகமத்நகர்: சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவை இணைத்தவர். ஒரே நாடாக மாற்றியவர். அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று இந்தியாவின் பல பகுதிகளுக்கு போக நாம் விசா வாங்க வேண்டியிருந்திருக்கும். ஏன் கிர் காட்டுக்குப் போய் சிங்கத்தைப் பார்க்க பாகிஸ்தானுக்குத்தான் நாம் போயிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
அகமத் நகரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய மோடி, நாட்டின் ஒற்றுமைக்காக பாடுட்டவர் படேல். அவர் நாட்டை இணைத்தவர். அவர் வழியில் எனது கட்சி செயல்படும்.
அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று நாட்டின் பல பகுதிகளுக்குப் போக விசா வாங்க வேண்டியிருக்கும். ஏன் கிர் சிங்கங்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருக்கும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் படேலுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தியை நினைவு கூறும் அதே நேரத்தில் படேலையும் நாம் நிச்சயம் நினைவு கூற வேண்டும்.
படேல் காங்கிரஸ்காரர் என்று அக்கட்சியினர் கூறுகிறார்கள். அவர் மாபெரும் இந்தியர். இந்த நாட்டுக்காக உழைத்தவர், சேவையாற்றியவர். அவர் அத்தனை இந்தியர்களுக்கும் பொதுவானவர் என்றார் மோடி.