ஜனநாயக இந்தியா.. அன்று டீ விற்ற நரேந்திர மோடி பாரதத்தின் பிரதமராகிறார்!
டெல்லி: குஜராத்தில் சாமானிய குடும்பத்தில் பிறந்து, டீ விற்பனை செய்து வந்த நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருக்கிறார்.
குஜராத் மாநிலம் மேசானா மாவட்டம், வாத்நகர் என்ற இடத்தில் 1950 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 17 ந்தேதி தாமோதரதாஸ் முல்சந்த் மோடி-ஹீரா பென் தம்பதியின் மூன்றாவது மகனாக பிறந்தார். சாமானிய குடும்பத்தை சேர்ந்தவர்.
தொடக்க காலத்தில் ரயில் நிலையத்தில் டீக்கடை வைத்திருந்த தந்தைக்கு உதவியாக டீ விற்பனை செய்தவர் மோடி. இளம்பிராயம் முதலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார்.
ஆர்.எஸ்.எஸ்.-ல் இருந்து பாஜகவுக்கு
பின்னர் 1980களின் இறுதியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினால் பாஜகவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் மோடி. பின்னர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் ரத யாத்திரைகளில் பங்கேற்று தீவிரமாக கட்சிப்பணி ஆற்றினார்.
தேர்தல் வெற்றி
பாஜக, 1998ம் ஆண்டு குஜராத், இமாசலபிரதேச மாநில தேர்தல் பிரசார பொறுப்பு மோடியிடம் தரப்பட்டது. அதில் கட்சிக்கு அபார வெற்றியைப் பெற்றுத்தந்தார்.
குஜராத் முதல்வர்
2001ம் ஆண்டு குஜராத் இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்வியால் முதல்வர் பதவியில் இருந்து கேசுபாய் பட்டேல் அகற்றப்பட்டார். அவரைத்தொடர்ந்து நரேந்திரமோடி குஜராத் மாநில முதல்வரானார்.
கோத்ரா ரயில்
2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மூண்ட இனக்கலவரத்தை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டார் என்ற விமர்சனம் இன்று வரையில் மோடி மீது உள்ளது. ஆனாலும் 2002, 2007, 2012 ஆண்டுகளில் தொடர்ச்சியாக வந்த குஜராத் சட்டசபை தேர்தல்களில் அபாரவெற்றி பெற்று தொடர்ந்து 4 வது முறையாக முதல்வர் பதவி வகித்தார்.
பாராட்டு
குஜராத் மாநிலம் பல்வேறு துறைகளில் முன்னிலை பெற்று விளங்குகிறது என்றால் அதற்கு மோடியின் திட்டமிடல், வழிகாட்டுதல், உழைப்புதான் காரணம் என்ற பாராட்டும் உள்ளது. இதனையடுத்து அவர் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அத்வானி எதிர்ப்பு
ஆனால் அத்வானி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவரை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சமரசம் செய்தனர். டெல்லியில் நடந்த கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக முறைப்படி அறிவிக்கப்பட்டார்.
பிரதமர் வேட்பாளர்
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி 9 கட்டங்களாக நடந்த தேர்தலில் நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். 25 மாநிலங்களில் அவர் 3 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, 437 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி பாரதீய ஜனதாவை வெற்றிக்கு வழிநடத்தினார்.
மோடி அலை
நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்ற வாதத்தை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா இந்த தேர்தலில் பெற்றுள்ள வெற்றி, மோடி அலை வீசியது என்பதற்கு சான்றாக அமைந்து விட்டது.
தனிப்பெரும்பான்மை
பாரதிய ஜனதா கட்சி தன்னிச்சையாகவே 283 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஜனநாயக நாட்டில், ஒருவர் சாமானிய குடும்பத்தில் பிறந்தாலும், பிரதமராக உயர முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக மோடி திகழ்கிறார்.