முறுக்கிக் கொண்ட மோடிக்கு ஒரு கூடை மாம்பழம் பார்சல்! நவாஸ் ஷெரிப் அனுப்பி வைத்தார்
டெல்லி: இந்தியாவுடனான உறவை இனிக்க செய்யும் முயற்சியாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு சுவையான பாகிஸ்தான் மாம்பழங்களை பரிசாக அனுப்பியுள்ளார்.
இந்திய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அழைக்கப்பட்டு அவரும் விழாவில் பங்கேற்றார். இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் உயர் கமிஷனர் அப்துல் பஷீத் சந்திப்பு நிகழ்த்தியதை தொடர்ந்து, இரு நாடுகளின் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்தது.
இதனால் இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதை போல தெரிந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்நாட்டு நெருக்கடியில் நவாஸ் ஷெரிப் சிக்கிக்கொண்டுள்ளார். இதனால் இந்திய-பாகிஸ்தான் உறவு மேலும் சீர்கெடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த சூழ்நிலையிலும், நரேந்திர மோடிக்கு, நவாஸ் ஷெரிப் மாம்பழ கூடையை பரிசாக அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலுவலக வழித்தடத்தின் மூலம் இந்த பரிசு மோடிக்கு கிடைக்கப்பெற்றதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் சென்றிருந்த மோடி, பாகிஸ்தான் மறைமுக யுத்தம் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கும் ஷெரிப் பதில் பேசாமல் மவுனம் காத்தார். இந்தியாவுடன் நட்பை தொடர வேண்டும் என்பதில் ஷெரிப் காட்டும் ஆர்வம்தான் அவரது நடவடிக்கைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
{ventuno}
மோடிக்கு மட்டுமின்றி, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கும், ஷெரிப் மாம்பழங்களை பரிசாக அளித்துள்ளார்.