என்டிடிவி ஒரு நாள் ஒளிபரப்பு தடை வழக்கு.. அவசரமில்லை என 5ம் தேதிக்கு தள்ளி வைத்தது சுப்ரீம் கோர்ட்
என்டிடிவி தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கு ஒரு நாள் தடைவிதிக்கப்பட்டது தொடர்பான விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்து வைத்துள்ளது.
டெல்லி: மத்திய அரசு விதித்த ஒரு நாள் ஒளிபரப்புக்கு தடைக்கு எதிராக என்டிடிவி தொடர்ந்த வழக்கு டிசம்பர் 5ம் தேதி விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இன்றே விசாரிக்கக் கூடிய அளவிற்கு அவசர வழக்கு இது இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக என்டிடிவி செய்திகளை ஒளிபரப்பியது. அப்போது, நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ விவரங்களையும், ரகசியங்களையும் டிவியில் பகிரங்கமாக ஒளிபரப்பியதாக மத்திய அரசு என்டிடிவி மீது குற்றம்சாட்டியது. மேலும், அதனுடைய ஒரு நாள் ஒளிபரப்பை தடை விதித்தும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு நாடு முழுவதில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. பத்திரிகை சுதந்திரத்தை மீறும் செயல் இது என்று அரசியல் கட்சித் தலைவர்கள், இந்திய செய்தி ஆசிரியர்கள் சங்கம் என அனைத்து தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து, மத்திய அரசு என்டிடிவியின் ஒளிபரப்பிற்கு தடை விதித்திருந்ததை நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், என்டிடிவிக்கு எதிரான மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் என்டிடிவி நிர்வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிக்கவும் என்டிடிவி நிர்வாகம் கோரியது.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு என்டிடிவியின் ஒருநாள் ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. மேலும், அடுத்த மாதம் 5ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.