விரக்தியில்தான் கிட்னியை விற்கப் போவதாக கூறினேன்.. ஸ்குவாஷ் வீரர் விளக்கம்
லக்னோ: இளம் ஸ்குவாஷ் வீரரான ரவி தீக்சித் விரக்தியில்தான் தனது சிறுநீரகத்தை விற்கப்போவதாக அறிவித்ததாகவும், மற்றபடி அந்த உத்தேசம் ஏதும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்தவர் ரவி தீக்சித்(20). ஸ்குவாஷ் விளையாட்டு வீரரான இவர், அடுத்த மாதம் துவங்க உள்ள தெற்காசிய போட்டிகளில் பங்கேற்க சென்னையில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், போதிய ஸ்பான்சர் இல்லாததால் பயிற்சிக்கு பணம் இல்லாமல் திண்டாடிய ரவி, தனது சிறுநீரகத்தை விற்கப்போவதாக பேஸ்புக் வாயிலாக அறிவித்தார். அதன் விலை ரூ. 8 லட்சம் என்றும் அவர் அப்பதிவில் தெரிவித்திருந்தார்.
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவரான ரவியின் இந்தப் பதிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச தரவரிசையில் 211-வது இடத்தில் உள்ள இவர், பொருளாதார பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இந்திய ஸ்குவாஷ் சங்க தலைவர் தேபேந்ரநாத் சாரங்கி இது தொடர்பாக கூறுகையில், ‘ரவி தீக்ஷித் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்கு அகில இந்திய சங்கம் உதவி வருவதாக' தெரிவித்தார்.
ரவிக்கு ஆதரவாக உத்திரப்பிரதேச அமைச்சர் மூல்சந்த் சவுகானும் குரல் எழுப்பினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனது பதிவு குறித்து ரவி கூறுகையில், "உண்மையில் சிறுநீரகத்தை விற்க வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. விரக்தியில் அந்தப் பதிவை இட்டு விட்டேன். ஸ்குவாஷ் தான் என் வாழ்க்கை. தொடர்ந்து நான் விளையாடுவேன். ஸ்குவாஷ் விளையாட்டுக்கு அரசு ஒதுக்கும் நிதியை அதிகப்படுத்தினால், தன்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய ஸ்குவாஷ் சம்மேளனத்திற்கும் அவர் விரிவாக விளக்கம் அளித்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தான் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.