நீங்க சொல்ற துக்டே துக்டே கேங் எங்க இருக்கு? காங். குசும்பு கேள்வி...பேந்த பேந்த முழித்த மத்திய அரசு
Recommended Video
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், எதிர்க்கட்சியினரை விமர்சிக்க அதிகமாக பயன்படுத்தும் துக்டே துக்டே கேங் குறித்து எந்த ஒரு தகவலுமே இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை ஏளனம் செய்வதற்காகவும் முத்திரை குத்தவும் பல்வேறு அவதூறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அர்பன் நக்சல்கள், தேசவிரோதிகள், சமூக விரோதிகள், பாகிஸ்தான் கைக்கூலிகள், ஜின்னாவின் கைக்கூலிகள், மாவோயிஸ்டுகள் என ஏகப்பட்ட முத்திரைகள் குத்தப்படுகின்றன.
இந்த வரிசையில் பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் அண்மையில் அறிமுகப்படுத்தியதுதான் துக்டே துக்டே கேங். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி மாணவர்கள் போராட்டம் நடத்திய போது வலதுசாரிகளால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
இந்த வன்முறைகள் கடும் கண்டனத்துக்குள்ளான நிலையில் துக்டே துக்டே கேங் என்கிற புதிய முத்திரையை போராடுகிறவர்கள் மீது வலதுசாரிகள் குத்தினர். இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் அடிக்கடி பொதுக்கூட்டங்களில் பயன்படுத்துகின்றனர்.
துக்டே துக்டே கேங் என்றால் தமிழில் சில்லறைப் பசங்க அல்லது சல்லிப் பயலுக என அர்த்தம் கொள்ளலாம். இப்படி ஒரு குழு ஒன்று இருக்கிறதா? என ஏற்கனவே பத்திரிகையாளர் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்தார். ஆனால் இதற்கு பதில் தெரியாமல் அமித்ஷாவின் உள்துறை அமைச்சகமே விழிபிதுங்கியது.
இந்நிலையில் லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி. வின்சென்ட் ஹெச். பலா, துக்டே துக்டே கேங் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பெயரில் ஏதேனும் அமைப்பு இயங்குகிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷான் ரெட்டி துக்டே துக்டே கேங் குறித்து எந்த ஒரு தகவலும் விசாரணை அமைப்புகளிடம் இல்லை என கூறியுள்ளார்.