நாடாளுமன்றத்தில் அத்வானியின் அறை பறிபோனது! லோக்சபா இருக்கை ஒதுக்கீட்டிலும் குழப்பம்!!
டெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக மூத்த தலைவர் அத்வானி பயன்படுத்தி வந்த அறையை அவர் தொடர்ந்து பயன்படுத்துவது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், லோக்சபாவில் அவருக்கான இடம் ஒதுக்கப்படாததால் அவர் எங்கு அமர்வது என்பதிலும் குழப்பம் நிலவி வருகிறது.
நாடாளுமன்ற வளாகத்தில் அத்வானி வழக்கமாகப் பயன்படுத்தும் அறைக் கதவில் இருந்த அவரது பெயர்ப் பலகை நீக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து அந்த அறை பறிக்கப்படுவதன் அறிகுறிதான் இந்த நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர்ப் பலகை கூட நீக்கப்படாத நிலையில், அத்வானியின் பெயர்ப் பலகை மட்டும் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாடாளுமன்றத்தில் பாஜக கட்சி அலுவலக அறையின் முக்கிய நாற்காலியில் அமராமல் அறையிலிருந்த ஓரு சோபாவில் அவர் அமர்ந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் லோக்சபாவில் எந்த இருக்கையில் அமர்வது என்பதில் அத்வானிக்கு குழப்பம் ஏற்பட்டது. நேற்று காலையில், சபைக்குள் நுழைந்தவுடன் இரண்டாவது வரிசையில் அமைச்சர் வெங்கய்ய நாயுடுவின் அருகில் அவர் அமர முயன்றார். ஆனால் நாயுடு கேட்டுக்கொண்டதற்கிணங்க முன்வரிசையில் அமர்ந்தார்.
அங்கிருந்தே எம்.பி. பதவிப் பிரமாணத்தையும் எடுத்துக்கொண்டார். ஆனால் பிற்பகலில் அவர் 8-ஆவது வரிசையில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Senior BJP leader LK Advani has been moved out of NDA chairman's room in Parliament and has been sitting in a makeshift BJP office room.