பீகாரில் முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முதல்வர் பதவி தர மாட்டோம்- பாஜக சொல்கிறது
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால் முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முதல்வர் பதவி தரமாட்டோம்; நிச்சயம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக நியமிக்கப்படுவார் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் அணியாக ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியும் முற்படுத்தப்பட்ட, தலித் மக்களின் அணியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் நிற்கிறது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 85% முற்படுத்தப்பட்ட வகுப்பினரே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ராஜ்புத் சமூகத்தினர் 36, பூமிகார் சமூகத்தினர் 28 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. பீகார் மக்கள் தொகையில் முற்படுத்தப்பட்ட மக்கள் தொகை என்பது மொத்தம் 14% முதல் 15% வரை இருக்கிறது.
ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய கூட்டணியில் பிற்படுத்தப்பட்ட சமூகமான யாதவர்கள் 64 பேர்; இவர்களில் 48 பேர் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்கள். அத்துடன் 33 முஸ்லிம்களையும் லாலு வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளார். அத்துடன் 30 கோரி சமூகத்தினரையும் 17 குருமி சமூகத்தினரையும் இந்த அணி களத்தில் நிறுத்தியுள்ளது.
பா.ஜ.கவைப் பொறுத்தவரையில் யார் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கவில்லை. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் அணியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரான நிதிஷ்குமார்தான் முதல்வர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில்தான் தேர்தல் பிரசாரத்திலும் கூட ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்த தேர்தல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் முற்படுத்தப்பட்ட மக்களுக்குமான யுத்தம் என பேசிவருகிறார். தற்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் முற்படுத்தப்பட்ட சமூகத்தவர் ஒருவரை முதல்வராக்க மாட்டோம். பீகாரின் அடுத்த முதல்வர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராக அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவராகத்தான் இருப்பார் என்று கூறியுள்ளார்.
இது பா.ஜ.க.வில் புகைச்சலையும் கிளப்பிவிட்டுள்ளது. தேர்தலில் 85% முற்படுத்தப்பட்ட வகுப்பினரை வேட்பாளராக நிறுத்திவிட்டு அதெப்படி நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரை முதல்வராக்குவோம் என கூறலாம்? என்ற கலகக் குரல்களும் வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications