வளர்த்தா தாடி... எடுத்தா மொட்டை...: திருப்பதியில் ஓ.பி.எஸ் தரிசனம்
திருப்பதி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதையொட்டி, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி, வெங்கடாசலபதியை தரிசனம் செய்துள்ளார். இதன்மூலம் தமிழக அமைச்சர்களில் மொட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்றதையடுத்து அவரது முதல்வர் பதவி பறிக்கப்பட்டதுடன், அவருடைய எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்பட்டது.
இந்த சோகத்தில் ஓ.பன்னீர் செல்வம் மட்டுமல்லாமல், பல்வேறு அமைச்சர்களும், அதிமுகவினரும், ஜெயலலிதா வெளியே வர வேண்டும் என்று வேண்டி முடி வளர்த்து வந்தனர். தாடியுடன் வலம் வந்தனர். ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்தததும் பலர் மொட்டை போட்டனர். ஆனால் அமைச்சர்கள் மொட்டையெல்லாம் அடிக்கவில்லை. சிலர் தாடியை எடுத்து விட்டனர்.
கோவில்களில் வேண்டுதல்கள்
ஜெயலலிதா விடுதலையாக வேண்டி பல்வேறு ஆலயங்களில் யாகங்கள், தீர்த்தக்குடங்கள், காவடிகள், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட வேண்டுதல்களை ஓ.பன்னீர் செல்வம், செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் செய்து வந்தனர்.
கரூரில் செந்தில் பாலாஜி
கடந்த மே 11ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையான உடன், நீண்ட நாட்களாக தாடியுடன் வலம் வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தாடியுடன், தலைமுடியையும் காணிக்கையாக்கி மொட்டை போட்டு நிவர்த்தி செய்தார்.
திருச்செந்தூரில் எஸ்.பி. வேலுமணி
அதேபோல அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருச்செந்தூர் முருகன் கோவிவில் முடிகாணிக்கை செலுத்தி தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
திருப்பதியில் ஓ.பி.எஸ்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதையொட்டி, ஓ.பன்னீர்செல்வம் முடி காணிக்கை செலுத்தியுள்ளார். இன்று காலையில் திருமலையில் முடி காணிக்கை செலுத்திய அவர், வெங்கடாஜலபதியை தரிசித்தார்.
அதிகாரிகள் வரவேற்பு
திருப்பதி ஏழுமைலையானை தரிக்க நேற்று இரவு திருமலைக்கு வந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய அவர், இன்று காலை முடி காணிக்கை செலுத்தினார். சிறப்பு தரிசனம் வரிசையில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.