"மாஸ்க் எங்கே".. பெண்ணின் தலைமுடியை பிடித்து, தரதரவென இழுத்து அடித்த போலீஸ்.. கதறிய மகள்.. ஷாக்!
மாஸ்க் அணியாத பெண்ணை போலீசார் சரமாரி தாக்கி உள்ளனர்
போபால்: மாஸ்க் போடாததால், ஒரு பெண்ணின் தலைமுடியை பிடித்து, தரதரவென இழுத்து தாக்கும் போலீசாரின் குரூர வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..
நாடு முழுவதும் தொற்று விஸ்வரூபமெடுத்து வருகிறது.. 2வது அலை மிக வேகமாகவும் பரவி வருகிறது.. இதில், பெரும்பாலான வடமாநிலங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. எனவே, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்கி உள்ளன.
அந்த வகையில், மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. யாராவது மாஸ்க் அணியாமல் நடமாடினால் அவர்களை கண்காணித்து, எச்சரிக்கும் பணியில் போலீசாரும் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
மத்திய பிரதேசம்
அந்த வகையில், தொற்று அதிகமாக பாதித்த மாநிலங்களில் ஒன்று, மத்திய பிரதேசம்.. இங்கும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.. இந்நிலையில், சாகர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது ஒரு பெண் தன்னுடைய மகளுடன், கடைக்கு சென்றுள்ளார்.. கடைகளை சீக்கிரம் அடைத்து விடுவார்கள் என்பதற்காக, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க சென்றுள்ளார்.
விசாரணை
ஆனால், அவர் மாஸ்க் அணியாமல் சென்றுள்ளதாக தெரிகிறது. இதை கவனித்த போலீசார், அவரிடம் என்ன ஏதென்று கூட விசாரிக்காமல், சரமாரியாக தாக்கியுள்ளனர். பிறகு, தங்களின் போலீஸ் ஜீப்பில் ஏறுமாறும் சொல்லி உள்ளனர்.. ஆனால், அந்த பெண்ணோ, ஜீப்பில் ஏற மறுத்துள்ளார்.. இதனால் மேலும் ஆத்திரமடைந்த போலீசார், அவரது தலைமுடியை பிடித்து, தரதரவென இழுத்து வந்து மறுபடியும் கண்மூடித்தனமாக தாக்கினர்.
மகள்
இதை பார்த்த அந்த பெண்ணின் மகள், கதறி துடித்தார்.. தன்னுடைய அம்மாவை காப்பாற்றுவதற்காக நீண்ட நேரம் போலீசாரிடம் போராடினார்.. மன்றாடினார்.. இதை அங்கிருந்தோர் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாருமே சென்று போலீசாரை தடுக்கவில்லை.. மாறாக, அந்த அம்மாவை அடிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர்.. இந்த வீடியோவையும் சோஷியல் மீடியாவில் பதிவிட, அது வைரலானது.. பொதுமக்கள் அதை பார்த்து கடுமையான அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
போலீசார்
இப்படித்தான் 2 மாசத்துக்கு முன்பும், இதே மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்தது.. ஆஸ்பத்திரியில் அப்பாவுக்கு சாப்பாடு தருவதற்காக ஒரு ஆட்டோக்காரர் தன் குழந்தையுடன் சென்றுள்ளார்.. அவர் அணிந்திருந்த மாஸ்க் கழண்டு கீழே விழுந்துவிட்டது. ஆனால், இதை ஏற்காமல் அங்கிருந்த போலீசார், தரையில் தள்ளி, பூட்ஸ் காலால் நெரித்து தாக்கினார்கள்.. தன் அப்பாவை அடிப்பதை பார்த்து, அந்த குழந்தை கதறியதும், பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததும் வீடியோவாகவும் வெளிவந்தது.
வடமாநிலம்
யாராவது மாஸ்க் போடவில்லை என்றால், அவர்களை பிடித்து தாற்காலிகமாக ஜெயிலில் வைக்க வேண்டும்.. இதுதான் மத்தியப் பிரதேச அரசு பிறப்பித்திருந்த உத்தரவு.. ஆனால், இதை எந்த போலீசாரும் பின்பற்றாமல், தொடர்ந்து தாக்கி வருவது வேதனையை தந்து வருகிறது.. இதற்கு நம்ம ஊர் எவ்வளவோ பரவாயில்லை.. மாஸ்க் போடவில்லை என்றால், வழக்கு பதிவு செய்கிறார்கள்.. தேவையில்லாமல் ஊர் சுற்றினால் திருக்குறள் ஒப்புவிக்க சொல்கிறார்கள்.. திருக்குறளை ஒப்புவித்தால், அதற்கு இலவச மாஸ்க்கும் தருகிறார்கள்.. ஆக, மாஸ்க் விஷயத்திலும் வடமாநிலங்கள் மோசமாகவே உள்ளன..!