காஷ்மீர் எல்லையில் பாக். தொடர்ந்து தாக்குதல்.. 5 இந்திய வீரர்கள் படுகாயம்.. தொடரும் பதற்றம்!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை புகுந்து நேற்று தாக்குதல் நடத்தியது. 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து பாகிஸ்தான் இதற்கு உடனடியாக பதில் அளிக்கும் என்று கூறியது. அதன் ஒருகட்டமாக தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று மாலை
நேற்று மாலையில் இருந்தே பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று காஷ்மீரின் சோபியான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
தொடர் தாக்குதல்
இன்றும் அந்த தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. காஷ்மீர் எல்லையில் 12-15 இடங்களில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கியமாக சோபியான் பகுதியில் இருந்து பாகிஸ்தான் இந்த தாக்குதல் நடத்தி வருகிறது.
மிக மோசம்
பாகிஸ்தானில் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பாக். ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பலியாகாத வகையில் இந்திய ராணுவம் பாதுகாப்பாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் மிகவும் உயர் ரக ஆயுதங்களை வைத்து தாக்குதலை அரங்கேற்றி வருகிறது.
எத்தனை பேர்
நேற்று மாலை 6.30 மணியில் இருந்து பாக். தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று அதிகாலை நடந்த தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இந்திய ராணுவமும் தொடர்ந்து திருப்பி தாக்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.