நடிகர் ஜெயராம் விழாவில் கருப்புக் கொடி... போலீஸாருடன் மோதிய இளைஞர்!
கோழிக்கோடு: பிரபல மலையான நடிகர் ஜெயராம் கலந்து கொண்ட விழாவில் இளைஞர் ஒருவர் கருப்புக் கொடி காட்ட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள இஞ்சோடி என்ற இடத்தில், பள்ளி மாணவர்கள் இடையே கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக முதல் பரிசு பெறும் பள்ளிக்கு 117 பவுன் தங்க கோப்பை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டிகளில் வென்று கோழிக்கோடு மற்றும் பாலக்காடு அணிகள் முதல் பரிசை பகிர்ந்து கொண்டன.
இந்த நிகழ்ச்சியில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கேரள கல்வித்துறை அமைச்சர் அப்துரப் உள்பட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான மாணவ-மாணவிகளும் திரண்டு இருந்தனர்.
விழா மேடையில் அமைச்சர் அப்துரப் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு இளைஞர் கையில் கருப்புக் கொடியுடன் கோஷம் போட்டபடி விழா மேடை அருகே வந்தார். பிறகு மேடை மீது ஏறி பாய்ந்து கல்வி அமைச்சரை நோக்கி செல்ல முயன்ற அந்த இளைஞரை, பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மடக்கிப்பிடித்தார். இதனால் விழாமேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், மற்ற காவலர்கள் உதவியுடன் அந்த இளைஞரை, போலீசார் வேனில் ஏற்றிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. இயக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், என்ன காரணத்துக்காக அவர் கருப்புக் கொடியுடன் விழா மேடைக்கு செல்ல முற்பட்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.