மாட்டிறைச்சி வதந்தியால் முதியவர் படுகொலை...சர்ச்சையாக வெடிக்கும் பிரதமர் மோடியின் கனத்த மவுனம்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கிளப்பிவிடப்பட்ட வதந்தியால் முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை கொந்தளிக்க வைத்துள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு கருத்தையும் இதுவரை தெரிவிக்காமல் கனத்த மவுனத்துடன் இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இடம் பெற்றிருந்தாலும் டெல்லியில் இருந்து கூப்பிடுதூரத்தில் இருக்கும் தாத்ரியில்தான் இக்லாக் என்ற இஸ்லாமிய முதியவர், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கிளம்பிய வதந்தியை நம்பி மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உறைய வைத்துள்ளது.

மதவெறிக்குப் பலியான பெரியவர் இக்லாக் குடும்பத்தினரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர். அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி ஒரு சிறு கருத்தையும் கூட தெரிவிக்கவில்லை.
சமூக வலைதளங்களை முழுமையாக பயன்படுத்துகிறவர் என பெயரெடுத்த பிரதமர் மோடி ஆகக் குறைந்தபட்சம் இச்சம்பவத்துக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காமல் கனத்த மவுனத்துடன் இருப்பது ஏன்? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன.
இது குறித்து பத்திரிகையாளர் மினாஸ் மெர்சென் கூறுகையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி என்ன கூறப்போகிறார் என்பதை விட அவர் பேசியிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒன்று. முதியவர் இக்லாக்கை அடித்து கொலை செய்த சம்பவத்துக்கு உத்தரப்பிரதேச மாநில அரசுதான் பொறுப்பு... ஆனால் அதைவிட பிரதமர் மோடி வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும் என்பதும் முக்கியம் என்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜாவோ, தபோல்கர், கல்பர்கி போன்ற மதச்சார்பற்ற அறிஞர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் சரி.. இப்போது ஒரு சாமானியன் படுகொலை செய்யப்பட்ட போதும் சரி.. பிரதமர் மோடியிடம் ஒரு வார்த்தை கூட வரவில்லை.. இக்லாக்கை படுகொலை செய்தவர்கள் உள்ளூர் பா.ஜ.க.வுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.. அப்படியானால் இது ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா இல்லை என்று சொல்லிவிட முடியுமா? என கேள்வி எழுப்புகிறார்.
மேலும் நமது பிரதமர்கள் அரசியல்வாதிகள்.. அனைத்து தரப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள்.. ஆகையால் இனியாவது பிரதமர் மோடி ஒரு அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம் என்றார்.
ஆனால் டெல்லி பா.ஜ.க. தலைவர் அஜாஸ் இல்மியோ, நாங்கள் இக்லால் படுகொலையைக் கண்டிக்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் பேசியுள்ளனர். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இக்லால் கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்.
ஆக ஒரு அமைதியே புயலாக வீசுகிறது...












Click it and Unblock the Notifications