குஜராத் மாடல்.. போக்கசை மாற்றிய பிரதமர் மோடி.. ரூ.6,800 கோடியில் மேகாலயா, திரிபுராவுக்கு பாஜக குறி!
ஷில்லாங்: அடுத்த ஆண்டு துவக்கத்தில் மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று அங்கு சென்று குஜராத் பாணியில் ரூ.6,800 கோடியில் இருமாநிலங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி பாஜகவின் தேர்தல் பணிக்கு பிள்ளையார் சுழி போட உள்ளார்.
இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் வடகிழக்கு மாநிலங்கள் என அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த மாநிலங்கள் அளவில் மிகவும் சிறியவையாகும். இந்நிலையில் தான் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் மேகாலயா, நாகலாந்து, திரிபுரா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கும் ஒன்றாக தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

குஜராத் தேர்தல் வெற்றி
இந்த 3 மாநிலங்களில் தலா 60 தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்கள் பக்கம் போக்கசை திருப்பி உள்ளார். சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. இந்த 2 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இது சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு நன்கு கைக்கொடுத்தது.

வடகிழக்கு மாநிலங்களில் கவனம்
அந்த பாணியில் தான் தற்போது பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்கள் பக்கம் கவனத்தை செலுத்தி உள்ளார். அடுத்த ஆண்டு மேகாலயா, திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மேகாலயாவின் பொதுக்கூட்டம்
மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடக்கும் வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். அதன்பிறகு 11.30 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். அதன்படி அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மற்றும் திரிபுரா மாநிலங்களை இணைக்கும் 6 சாலைத் திட்ட பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஷில்லாங் தொழில் நுட்ப பூங்காவின் 2ம் கட்டப் பணிகளுக்கும், துராவில் ஒருங்கிணைந்த மருத்துவமனை மற்றும் கன்வென்சன் மையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.2,450 கோடியில் பல்வேறு திட்ட பணிகளை செய்ய உள்ளார்.

திரிபுராவில் திட்ட பணிகள்
அதன்பிறகு மேகாலயாவில் இருந்து திரிபுரா செல்லும் பிரதமர் மோடி அகர்தலாவிவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ரூ.4,350 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டுகிறார்.பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ரூ.3,400 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பதோடு அகர்தலா புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். இதன்மூலம் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் மேகாலயா மற்றும் திரிபுராவில் பாஜகவை வெற்றி பெற செய்வதற்கான பணியை பிரதமர் மோடி இப்போதே தொடங்கி உள்ளார். இந்த 2 மாநிலங்களிலும் பிரதமர் மோடி ரூ.6,800 கோடி திட்ட பணிகளை வழங்க உள்ளார்.

மேகாலயா நிலவரம் என்ன?
பிரதமர் மோடி நாளை செல்லும் மேகாலயாவில் பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா ஜனநாயக கட்சிகள் எனும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில் பாஜகவின் 2 எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 44 எம்எல்ஏக்கள் உள்ளனர். இங்கு எதிர்க்கட்சியாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு மம்தா பானர்ஜி மேகாலயா சென்றார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வராக இருந்த முகுல் சங்மா சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் அவருடன் தீவிரமாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி மேகாலயாவில் கவனம் செலுத்த உள்ளார்.

திரிபுரா ஆட்சியில் யார்?
அதேபோல் திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது மாணிக் சாகா முதல்வராக உள்ளார். கடந்த தேர்தலில் திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 24 இடங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தது. இந்த முறையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக தேர்தல் பணி செய்யும் என்பதால் பிரதமர் மோடி முன்கூட்டியே திரிபுராவில் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications