உஸ்பெகிஸ்தான் தொடங்கி தஜிகிஸ்தான் வரை - 6 நாடுகளுக்கு பிரதமர் மோடியின் புதிய “விசிட்”!
டெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ரஷ்யா உள்பட 6 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
அடுத்த வாரம் 6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 5 மத்திய ஆசிய நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் செல்கிறார். போர்த்திறன் மற்றும் பொருளாதார மேம்பாடு, எரிசக்தி ஒப்பந்தங்கள் ஆகியவைகளுக்காக இந்த பயணம் நடைபெற இருக்கிறது.
ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாட்டிலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இப்போது சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய 6 நாடுகள் உள்ளது. உபா என்ற இடத்தில் நடைபெறும் இதன் மாநாட்டில், இந்தியாவும் இந்த அமைப்பில் சேருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கம் இதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிரிக்ஸ் மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள முக்கிய பொருளாதார பிரச்சினைகள், பொருளாதார விவகாரங்களில் ஒத்துழைப்பு, உள்ளூர் பணத்தின் மூலமே வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கி ஏற்கனவே உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வங்கி மூலம் உள்ளூர் பணமாகவே கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராயப்படுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் 6 ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் செல்லும் நரேந்திர மோடி அங்கிருந்து 7 ஆம் தேதி கஜகஸ்தான் செல்கிறார். 8 ஆம் தேதி ரஷ்யா செல்கிறார். 10 ஆம் தேதி துர்க்மெனிஸ்தான், 11 ஆம் தேதி கிர்கிஸ்தான், 12 ஆம் தேதி தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
இதன்மூலம் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு ஒரே பயணமாக செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெயரையும் நரேந்திர மோடி பெறுகிறார். இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய மத்திய ஆசிய நாடுகளில் இருந்து கேஸ் எடுத்துவருவதில் சரியான இணைப்பு இல்லாததால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் துர்க்மேனிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா திட்டத்தை துரிதப்படுத்த இந்த பயணத்தின்போது முயற்சி எடுக்கப்பட உள்ளது. அதோடு இந்த பயணத்தில் அந்தந்த நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையும் நடத்துகிறார். இந்த தகவல்களை வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.