மதமோதல்களுக்கு முடிவு- பெண் சிசு கொலை தடுப்பு- திட்டக் கமிஷன் கலைப்பு: சுதந்திர தின உரையில் பிரதமர்
டெல்லி: நாட்டில் நீடித்து வரும் மத மோதல்களுக்கு முடிவு கட்டுவோம்; பெண் சிசு கொலையை தடுப்போம்; தற்போதைய திட்டக் கமிஷன் முறையை மாற்றி அமைப்போம்; ஏழைகளுக்கும் காப்பீட்டு வசதியுடன் கூடிய வங்கிக் கணக்கு வழங்குவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சுதந்திர தின விழா உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தையொட்டி முதல் முறையாக இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தொகுப்பு:
உலகம் முழுவதும் இந்தியர்கள் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். நான் ஒரு பிரதமராக இல்லாமல் உங்களின் முதன்மை சேவகனாக இருந்து வாழ்த்துகிறேன். நான் ஒரு பிரதமர் அல்ல.. பிரதம சேவகன்.
நாட்டின் சுதந்திரப் போராட்டம் பல ஆண்டுகாலம் நடைபெற்றது. பல தலைமுறைகள் நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களது உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். தங்களது இளம்பிராயத்தை சுதந்திர போராட்டத்துக்காக அர்ப்பனித்திருக்கின்றனர்.

அரசியல்வாதிகளால் அல்ல..
இந்த நாடு அரசியல்வாதிகளாலோ, ஆட்சியாளர்களாலோ அல்லது அரசுகளாலோ கட்டமைக்கப்பட்டது அல்ல. இந்த தேசம் விவசாயிகளால் தொழிலாளர்களால் கட்டமைக்கப்பட்டது. நமது தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள், இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களால் கட்டமைக்கப்பட்டது. இந்த நாளில் இந்தியாவுக்காக அனைத்து இந்தியர்களுக்காக சேவை செய்ய உறுதி ஏற்போம்.

அழகாக அரசியல் சாசனம்
இந்த நாட்டின் குக்கிராமத்தில் ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்த என்னை இந்த மேடையில் நிற்க வைத்திருப்பதுதான் நமது நாட்டு அரசியல் சாசனத்தின் அழகு. நமது நாட்டை முன்னாள் ஆண்ட அரசுகள், முன்னாள் பிரதமர்கள், மாநில முதல்வர்கள் என அனைவரும்தான் மேம்பாடு அடையச் செய்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் மதிப்புக்குரியவர்கள்.

முன்னேற்றம்
நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டியது அவசியம். அரசியலை முன்னெடுக்காமல் நாட்டின் வளர்ச்சியை நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

வன்முறை வேண்டாம்
வலிமையான இந்தியா உருவாக ஒவ்வொருவரவது பங்களிப்பும் அவசியம். நமது நாட்டின் இளைஞர்கள் சரியாக பாதையில் செல்ல வேண்டுமெனில் அது பெற்றோரின் பொறுப்பு. வன்முறை பாதையை கைவிட வேண்டும். நேபாளத்தை இதற்கு முன்னுதாரணமாக கொள்ளலாம். மாவோயிஸ்டுகள் வன்முறை பாதையை கைவிட வேண்டும்.

மதவன்முறைக்கு முடிவு
பல நூற்றாண்டுகளாக மத வன்முறையை பார்த்துவிட்டோம்... போதும் இதுவரை மக்கள் பலியானது போதும். கடந்த கால மதவன்முறைகளை மறப்போம்- மதமோதல்களுக்கு முடிவு கட்டுவோம்.

பெண்கள் நிலை
நாட்டின் ஆண்- பெண் சதவிகிதம் என்பது சமநிலையில் இல்லை. தயவு செய்து பெண் குழந்தைகளை பேராசைக்காக கொல்வதை நிறுத்துங்கள். பலாத்கார சம்பவங்கள் என்பவை ஒட்டுமொத்த தேசத்துக்கே அவமானம்.

பெண்கள் சாதனை
காமன்வெல்த் போட்டிகளில் பெண்களின் சாதனை போற்றுதலுக்குரியது. காமன்வெல்த் போட்டிகளில் 28 பெண்கள் பதக்கங்களை அள்ளி வந்துள்ளனர். மகள்களை கேள்வி கேட்கும் பெற்றோர் மகன்களையும் விசாரித்து சரியான பாதையில் அழைத்து செல்ல வேண்டும். அரசு ஊழியர்கள் செய்வது பணி மட்டுமே அல்ல.. அது நாட்டுக்கான சேவை.

விவசாயிகளுக்கு வங்கி கணக்குகள்
விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்கின்றனர். நாட்டின் ஏழை விவசாயிகளை வங்கி கணக்குகள் மூலம் இணைக்க வேண்டும். ஒவ்வொரு வங்கிக் கணக்குக்கும் ஒரு டெபிட் கார்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு டெபிட் கார்டும் ரூ1 லட்சம் இன்சூரன்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும்.

இளைஞர்கள்
நமது பலமே இளைஞர்கள்தான்...இளைஞர்களின் திறமையை நாம் பயன்படுத்த வேண்டும். "வாருங்கள் இந்தியாவை உருவாக்குவோம்" -இதுதான் மோடி மந்திரம்,. இந்தியா உற்பத்தித் துறையில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

உலக முதலீட்டாளர்களே
உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும். பில்லி சூனியத்தில் நம்பிக்கை கொண்டதாக அறியப்பட்ட நமது இந்தியாவை ஐடி வல்லுநர்கள் மாற்றிக் காட்டினர். கிராமப்புறங்களில் கல்வி கற்க பிராட்பேண்ட் இணைப்பை பயன்படுத்த வேண்டும். ஏழை மக்களுக்கும் டெலிமெடிசன் வசதி கிடைக்க வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா
நமது இலக்கு டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதாக இருக்க வேண்டும். மின்னணு அரசாங்கத்தின் மூலமே நல்ல அரசாங்கத்தை முன்னெடுக்க முடியும். நாட்டை ஒருகாலத்தில் ரயில்வே துறை இணைத்தது போல ஐடி துறையினர் நாட்டை ஒருங்கிணைக்க முன்வர வேண்டும்.

தூய்மைப் பணி
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவில் 'தூய்மை'யை வலியுறுத்துவோம்.

கழிப்பிடங்கள்
பெண்கள் திறந்தவெளி கழிப்பிடங்களுக்கு செல்வதை பற்றி செங்கோட்டையில் இருந்து பேசுவது அவமானமாக இருக்கிறது. நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். ஏழைகளின் கண்ணியம் எனக்கு முக்கியமானது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர், மாணவியருக்கு தனித்தனியே கழிவறைகள் இருக்க வேண்டும். பொது கழிப்பிடங்களுக்கு அரசாங்கம் கூடுதலாக நிதி ஒதுக்கும்.

சன்சட் ஆதர்ஷ் கிராம யோஜனா
சன்சட் ஆதர்ஷ் கிராம யோஜனா என்ற புதிய திட்டத்தின் மூலம் மாதிரி கிராமங்களை உருவாக்குவோம். ஜெயப்பிரகாஷ் நாரயணன் பிறந்த நாள் விழாவில் சன்சட் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்.

திட்டக் கமிஷன் மாற்றம்
நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போதைய திட்டக் கமிஷன் அமைப்பு முறையை மாற்றி அமைக்க வேண்டும். திட்டக் கமிஷனுக்கு பதிலாக புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தருணம் இது.

ஏழ்மையை அகற்றுவோம்
சுதந்திர போராட்ட காலத்தில் நாம் ஆயுதமேந்தவில்லை.. ஒன்றிணைந்தே போராடி அன்னிய ஆதிக்கத்தை வீழ்த்தினோம். ஏழ்மையை அகற்ற நாட்டின் குடிமக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். ஏழ்மை என்பது பொதுபிரச்சனை.. அண்டை நாடுகளிலும் இருக்கும் பிரச்சனை இது. இதனால் சார்க் நாடுகள் அனைத்தும் இணைந்து ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

தயாரிக்கப்பட்ட உரை அல்ல
பிரதமர் நரேந்திர மோடி வழக்கம்போல தயாரிக்கப்பட்ட உரையை தயாரிக்காமல் பேசினார். அத்துடன் வழக்கமான இரும்புக் கூண்டுக்குள் நின்று உரையாற்றவும் இல்லை. 1 மணி நேரத்துக்கும் சற்று கூடுதலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications