வாஜ்பாய் வளர்ப்பு மகள் காங்கிரஸில் சேர்ந்தது ஞாபகமில்லையா?.. ப.சி. பதிலடி
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் பாஜகவில் இணைந்தது குறித்து சிலாகித்துப் பேசுபவர்கள், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் காங்கிரஸில் சேர்ந்ததை ஏன் மறந்தார்கள் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் ப.சிதம்பரம். அப்போது பல்வேறு பிரச்சினைகள், அரசியல் சர்ச்சைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார்.
ப.சிதம்பரத்தின் பேட்டியிலிருந்து...
அரசியலுக்குத் தொடர்பில்லாத பிரதமரின் சகோதரர்
அரசியலுக்கு தொடர்பில்லாத பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் பாஜகவில் இணைந்தது குறித்து பேசுவதற்கு முன்பு, நீங்கள் முதலில் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் ஏன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்ற கேள்வியைத் தான் எழுப்பியிருக்க வேண்டும்.
ஒரு அறிக்கை கூட விட்டதில்லையே
எனக்கு நினைவு தெரிந்தவரை பிரதமரின் சகோதரர் அரசியல் ரீதியாக ஒரு அறிக்கை கூட விட்டதில்லை. அவர் பாஜகவில் சேர்ந்தது ஒரு நிகழ்வே இல்லை.
வளர்ப்பு மகளை மறந்து விட்டீர்களே...
வாஜ்பாயின் வளர்ப்பு மகள் கருணா சுக்லா நீண்ட காலமாக அரசியலில் இருந்தவர். பாஜகவில் எம்.பி. பதவி வகித்தவர். அவர் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவில் தாம் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ராம்தேவ் கருத்து அசிங்கமானது
ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ராம்தேவை காப்பாற்ற பாஜக முயற்சி செய்கிறது. ராம்தேவ் பேசிய பேச்சு அசிங்கமானது. ஏற்க முடியாதது.
சராசரி வளர்ச்சிதான்
குஜராத் மாநிலம் பொருளாதாரத்திலும் சரி பிற துறைகளிலும் சரி சராசரி வளர்ச்சியையே கண்டுள்ளது. இதை நான் ஆதாரப்பூர்வமாகவே கூறுகிறேன். பிற மாநிலங்களை விட சராசரி வளர்ச்சியைத்தான் குஜராத் கண்டுள்ளது.
குஜராத்தை விட வளர்ந்துள்ள பிற மாநிலங்கள்
குஜராத் மாடலை நாட்டின் பிற பகுதிகளுக்குக் கொண்டு போகவே முடியாது. காரணம், இதை விட சிறப்பான வகையில் பெரும்பாலான மாநிலங்கள் வளர்ந்துள்ளன.
எழுச்சிக்கு மோடியா காரணம்
பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் மோடி வரவே காரணம் என்று கூற முடியாது. அப்படிக் கூறுவதாக இருந்தால் அங்கு ஏற்பட்ட ஒவ்வொரு வீழ்ச்சிக்குக் கூட மோடியைத்தான் காரணமாக கூற வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையே இதற்குக் காரணம் என்றார் சிதம்பரம்.