"பஞ்சாயத்து" தொடக்கம்.. காஷ்மீருக்கான 370வது பிரிவை நீக்க கூட்டங்கள்: அமைச்சர் ஜிதேந்திரசிங்
டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370- பிரிவின் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமரின் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறி மற்றொரு சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறார்.
இது குறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து மாநில பாஜக பல்வேறு அமைப்புகளிடம் ஆலோசித்துள்ளது. இதற்காக காஷ்மீர் பள்ளத்தாக்கில் கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவற்றில் அரசியல் சாசனப் பிரிவு 370 தொடர்பான எங்களது நிலைப்பாட்டை அவர்களுக்கு புரிய வைத்துள்ளோம்.
இந்த விவகாரத்தைப் பொருத்தவரை பிரதமர் மோடியின் நோக்கமே, நாங்கள் முன் வைக்கும் விவாதத்தின் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 பிரிவின் பாதகங்கள் குறித்து நம்பிக்கையில்லாதவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.
இது குறித்து நாங்கள் விவாதிக்காமல், ஆலோசிக்காமல் இருந்தால் அந்த விதியை பற்றி அறியாதவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்?
இந்த விவகாரத்தை கவனத்துடன் கையாளும் நாங்கள், திறந்த மனத்துடன் ஜனநாயக நெறிமுறையில் நடக்கிறோம் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எங்களுடைய எண்ணத்தை யார் மீதும் திணிக்க விரும்ப மாட்டோம்.
இவ்வாறு ஜிதேந்திரசிங் கூறினார்.