விடுதியில் அழுகிய பெண் உடல்.. ‛கூகுள்பே’ மூலம் துப்புதுலக்கி நண்பரை தட்டித்தூக்கிய கோவா போலீசார்..
பனாஜி: கோவா தனியார் விடுதியில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட நிலையில் அவரை கொலை செய்ததாக நண்பர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ‛கூகுள்பே' மூலம் துப்பு துலக்கி போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பாண்டா பகுதியை சேர்ந்தவர் கணேஷ் விர்னோத்கர் . இவர் மே மாதம் 9ம் தேதி கோவாவில் உள்ள ஆரம்போலில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்தார்.
ரயில்வேயில் வேலை... 4 பேரிடம் ஆசைக்காட்டி சுமார் ரூ.60 லட்சம் அபேஸ் செய்தவர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் சாவந்தவாடி பகுதியை சேர்ந்த 30 வயது நிரம்பிய தோழி ஸ்ரேயாவுடன் அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில் மே மாதம் 13ம் தேதி அறையில் இருந்து வெளியே சென்ற கணேஷ் விர்னோத்கர் மீண்டும் திரும்பி வரவில்லை.
துர்நாற்றம்
அறையின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் கணேஷ் விர்னோத்கரும், அவரது தோழியும் அறையை அடைத்துவிட்டு சென்றதாக அங்குள்ள ஊழியர்கள் நினைத்தனர். ஆனால் சில நாட்கள் ஆனபோதிலும் கணேஷ் விர்னோத்கர் திரும்பி வரவில்லை. இதற்கிடையே அவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர்.
அழுகிய நிலையில் பிணம்
இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அறை கதவை உடைத்து பார்த்தனர். அப்போது கணேஷ் விர்னோத்கருடன் வந்திருந்த பெண் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்டது. இருப்பினும் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.
போலீசாருக்கு சிரமம்
இதையடுத்து கணேஷ் விர்னோத்கரை போலீசார் தேட தொடங்கினர். ஆனால் அவர் பற்றிய விபரங்கள் எதுவும் விடுதி ஊழியர்களிடம் இல்லை. ஏனென்றால் அவர் அறை முன்பதிவுக்கு இறந்த ஸ்ரேயாவின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி உள்ளார். இதனால் கணேஷ் விர்னோத்கர் எங்குள்ளார் என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
துப்பு கொடுத்த கூகுள்பே
இதற்கிடையே தான் கணேஷ் விர்னோத்கர் அறை முன்பதிவுக்கு கூகுள்பே மூலம் பணம் செலுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணப்பரிமாற்றத்துக்கான எண்ணை பயன்படுத்தி போலீசார் விசாரணை துவங்கினர். அப்போது கணேஷ் விர்னோத்கரின் அனைத்து விபரங்களும் போலீசாருக்கு தெரியவந்தது.
மகாராஷ்டிராவில் கைது
மேலும் அவர் மகாராஷ்டிரா மாநிலம் பாண்டாவில் போலீசார் கணேஷ் விர்னோத்கரை பிடித்து கோவா அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மே 10ம் தேதி வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நல பாதிப்பால் பாதிக்கப்பட்டார். இதனால் மே 13ம் தேதி அறையை பூட்டிவிட்டு சென்றதாக தெரிவித்தார். இருப்பினும் ஸ்ரேயா எப்படி இறந்தார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. மேலும், ஸ்ரேயா உடல்நலம் பாதிக்கப்பட்டதால் எதற்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. எதற்காக அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றார் என்ற சந்தேகங்கள் போலீசாருக்கு எழுந்தன. இதுபற்றி கேட்டதற்கு அவர் பதிலளிக்கவில்லை. இதனால் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேஷ் விர்னோத்கரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திட்டமிட்ட கொலையா?
மேலும் விடுதி அறை முன்பதிவுக்கு கணேஷ் விர்னோத்கர், ஸ்ரேயாவின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி உள்ளார். இதனால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கணேஷ் விர்னோத்கர் இதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்துள்ளனர்.