ஆர்எஸ்எஸ் விமர்சனம்: 'குத்து' ரம்யாவுக்கு 'குட்டு' வைத்த கோர்ட்... வழக்கு பதிவு செய்ய உத்தரவு!
பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குத்து தமிழ் திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்தவர் ரம்யா. அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பி.யாகவும் இருந்தார். 2014 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
ரம்யா தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்து ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிவிடுகிறார். அண்மையில் அவர் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டு திரும்பினார்.
பாகிஸ்தான் ஆதரவு
அப்போது பாகிஸ்தான் ஒன்றும் நரகமில்லை. அங்கே இருப்பவர்கள்தான் நல்லவர்கள் எனக் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு சற்று முன்னர்தான் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், தீவிரவாதிகளின் புகலிடமான பாகிஸ்தானுக்கு போவதும் நரகத்துக்கு போவது ஒன்று என கூறியிருந்தார்.
பாஜக கொந்தளிப்பு
மனோகர் பாரிக்கரின் கருத்துக்கு குத்து ரம்யாவின் கருத்து பதிலடியாக இருந்தது. இதனால் பாஜகவினர் கொந்தளித்தனர்.
தேசதுரோக வழக்கு
இந்த பேச்சுக்காக கர்நாடகாவின் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விட்டலா கவுடா என்பவர், நடிகை ரம்யா மீது சோம்வார்பேட்டை நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆர்எஸ்எஸ் மீது.....
இதனிடையே சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களுடன் ஆர்எஸ்எஸ் இயக்கம் கைகோர்த்திருந்தது என ஒரு இடத்தில் பேசினார். இந்த பேச்சுக்காக நடிகை ரம்யா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர் வசந்த் மரகடா என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
வழக்கு பதிவு செய்ய உத்தரவு
ஆனால் போலீசார் இப் புகாரை பதிவு செய்யவில்லை. இதையடுத்து வசந்த் மரகடா பெல்தான்கடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் வழக்கறிஞரின் புகார் அடிப்படையில் நடிகை ரம்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.