ராஜபாதையில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி!
டெல்லி: நாட்டின் 67-வது குடியரசு தினத்தையொட்டி இன்று டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே (Francois Hollande) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்திய குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் ஒருவர் கலந்து கொள்வது இது 5-வது முறை.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக் கொண்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் ஏராளமான பொதுமக்கள் விழாவில் கலந்துக் கொண்டு உள்ளனர்.
அசோக சக்ரா
ராணுவத்தில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் ‘அசோக சக்ரா' விருதை மோகன் நாத் கோஸ்வாமிக்காக, அவரது மனைவி பாவ்னாவிற்கு பிரணாப் முகர்ஜி விருது வழங்கினார். (இந்திய ராணுவத்தின் சிறப்பு பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த மோகன்நாத் கோஸ்வாமி, கடந்த வருடம் 10 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று வீர மரணம் அடைந்தார்.) இதனைத் தொடர்ந்து டெல்லி ராஜபாதையில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.
இதுவரை நமது நாட்டின் குடியரசு தின விழா அணிவகுப்பில் அன்னிய படையினர் யாரும் பங்கேற்ற சரித்திரம் கிடையாது. இப்போது முதன்முதலாக இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் படையினர் கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளனர்.
பிரதமர் மோடி மரியாதை
முன்னதாக டெல்லியில் அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். முப்படை ராணுவ அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
பாதுகாப்பு
குடியரசு தினவிழா கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் சதிவேலையில் ஈடுபடக்கூடும் என உளவுத்துறையினர் ஏற்கனவே எச்சரித்து உள்ளனர். கடந்த 2-ந் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தள தாக்குதலுக்கு பின்பு டெல்லியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. குடியரசு தின விழாவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. டெல்லியில் சுமார் 40 ஆயிரம் போலீஸ் மற்றும் துணை ராணுவப்படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.
மேலும் 20 ஆயிரம் வீரர்கள்
டெல்லி சுற்றுப்புறங்களில் மட்டும் கூடுதலாக மேலும் 20 ஆயிரம் வீரர்கள் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் விடியவிடிய சோதனை சாவடிகளில் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது.