ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு! நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா நாளை உதயம்!!
ஹைதராபாத்: தெலுங்கானா பகுதியில் ஜனாதிபதி ஆட்சி நாளை முடிவுக்கு வருகிறது. நாட்டின் 29வது மாநிலமாக தெலுங்கானா நாளை உதயமாகிறது.
இந்தியா விடுதலை பெற்ற போது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில் பரவி இருந்தனர். இந்த 22 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் அப்போதைய தமிழகமான சென்னை மாகாணத்திலும் மீதமுள்ள 9 மாவட்டங்கள் ஹைதராபாத் சமஸ்தானத்திலும் இருந்தன.
1953-ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது சென்னை மாகாணத்தில் இருந்த 12 மாவட்டங்கள், ஹைதராபாத் சமஸ்தானத்தில் இருந்த 9 மாவட்டங்கள் தனியாக பிரித்து ‘‘ஆந்திரா‘‘ எனும் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. பிறகு ஆந்திராவில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.
தெலுங்கானா கோரிக்கை
இந்த 23 மாவட்டங்களிலும் தெலுங்கு பேசப்பட்டு வந்தாலும் வட பகுதியில் உள்ள மக்கள் ‘தெலுங்கானா' என்ற பெயரில் தனிப் பகுதியாக செயல்படவே விரும்பினார்கள். 1969-ம் ஆண்டு தனித் தெலுங்கானா கோரி போராட்டம் வெடித்தது.
தீவிர போராட்டம்
கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா ராஷ்டிரிய சமி தலைவர் சந்திரசேகரராவ் தலைமையில் போராட்டம் தீவிரமானது. ஏராளமானோர் பலியாகி போராட்டம் உச்சகட்டத்தையும் எட்டியது.
புதிய மாநில அறிவிப்பு
சுமார் 50 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க கடந்த ஆண்டு மன் மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்பட்டது.
10 மாவட்டங்களுடன் தெலுங்கானா
ஆந்திராவில் மொத்தம் உள்ள 23 மாவட்டங்களில் ஹைதராபாத், நல்கொண்டா, மெகபூப் நகர், ரங்கா ரெட்டி, மேடக், நிஜாமாபாத், அடிலாபாத், கரீம்நகர், வாரங்கல், கம்மம் ஆகிய 10 மாவட்டங்கள் தெலுங்கானா மாநிலத்தில் இடம் பெறும் வகையில் பிரிக்கப்பட்டது.
13 மாவட்டங்களுடன் சீமாந்திரா
எஞ்சிய 13 மாவட்டங்களை கொண்ட கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகள் ஒன்று சேர்க்கப்பட்டு சீமாந்திரா மாநிலம் என்று அறிவிக்கப்பட்டது.
ஹைதராபாத் பொதுதலைநகரம்
தெலுங்கானா - சீமாந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் பொது தலைநகராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததின் பேரில் தெலுங்கானா மாநில உருவாக்கம் தொடங்கியது.
17 லோக்சபா, 119 சட்டசபை தொகுதிகள்
தெலுங்கானாவில் 17 லோக்சபா தொகுதிகளும், 119 சட்டசபை தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. சீமாந்திராவில் 25 லோக்சபா தொகுதிகளும் 175 சட்டசபை தொகுதிகளும் உள்ளன.
நாளை உதயமாகிறது
தெலுங்கானா மாநிலம் நாளை முதல் அதிகாரப்பூர்வமாக தனி மாநிலமாக செயல்பட தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தெலுங்கானா மாநிலம் நாளை உதயமாகிறது.
உற்சாக கொண்டாட்டம்
இன்றிரவு 12 மணிக்கு தெலுங்கானா மாநிலம் பிறப்பதாக கருதி இன்றிரவே கோலாகலம் தொடங்க உள்ளது. 12.01 மணிக்கு 10 மாவட்டங்களிலும் முக்கிய சந்திப்புகளில் பட்டாசுகள் வெடிக்க உள்ளனர். சில ஊர்களில் சுமார் 1 மணி நேரத்துக்கு தொடர்ந்து பட்டாசு போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களிலும் மக்கள் விழா கோல மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
அலங்காரங்கள்
ஹைதராபாத்தில் சட்டசபை கட்டிடம், சார்மினார், மாநகராட்சி கட்டிடம் உள்பட அனைத்து அரசு கட்டிடங்களும் புதுப்பிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களில் கண்கவர் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இன்றிரவு தொடங்கும் விழா நாளை முழுவதும் நீடிக்கும். நாளை காலை தெலுங்கானா போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை புதிய அரசு
தெலுங்கானா மாநிலம் தொடங்கும் முதல் நாளே அம்மாநிலத்தின் புதிய அரசு பொறுப்பு ஏற்க உள்ளது. தெலுங்கானா மக்களின் மனதில் இடம் பிடித்துள்ள சந்திரசேகரராவின் ராஷ்டிரிய சமிதி கட்சி முதல் அரசை அமைக்கும் பெருமையையும், சிறப்பையும் பெற்றுள்ளது.
12 அமைச்சர்கள்
சந்திரசேகரராவுடன் 12 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பிறகு தெலுங்கானா அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளார். துணை முதல்வராக தலித் இனத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் நியமிக்கப்படுகிறார்.
முத்திரை
தெலுங்கானா மாநிலத்துக்கான அரசின் முத்திரை காகதிய தோரணம் என்ற உருவத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது. இதை லட்சுமன் என்பவர் வடிவமைத்துள்ளார். சந்திர சேகராவ் பதவி ஏற்றதும் தனி மாநில முத்திரை சின்னத்தை அங்கீகரித்து முதல் கையெழுத்து போடுகிறார். பின்னர் தெலுங்கானாவுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்து போடுகிறார்.
ஜனாதிபதி ஆட்சி
இதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் ஜனாதிபதி ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் சீமாந்திராவில் சந்திரபாபு நாயுடு 8-ந் தேதிதான் பதவி ஏற்கிறார் என்பதால் அங்கு அதுவரை ஜனாதிபதி ஆட்சி நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.