இந்தோனேஷிய விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்..
டெல்லி : இந்தோனேஷிய விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய ராணுவத்துக்கு சொந்தமான சி 130 ஹெர்குலஸ் என்ற விமானம் சுமத்திரா தீவின் மேடான் சுவோன்டோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 2 நிமிடங்களில் மெடான் நகரின் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மெடான் நகர ஹோட்டல் மற்றும் வீடுகள் மீது விமானம் விழுந்து வெடித்ததும் அந்தப் பகுதியே தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் விமானி, 12 வீரர்கள் உள்ளிட்ட 45 பேர் பலியானதாக இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்தோனேஷியாவில் விமான விபத்து நிகழ்ந்த செய்தி மிகவும் துரதிருஷ்டமானது. விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர எனது பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications