மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்.. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்டனம்
மணிப்பூர் : மணிப்பூரில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது எனவும் பிரதமர் மோடி உருக்கமாக கூறியுள்ளார்.
சனிக்கிழமை (இன்று) காலை 10 மணியளவில், மணிப்பூர் மாநிலத்தில் மியான்மார் எல்லையை ஒட்டிய சூராசந்த்பூர் மாவட்டத்தில் ராணுவ அதிகாரி மற்றும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக வந்த வாகனத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் கன்னிவெடி தாக்குதல் நடத்தினர்.
இந்த கொடூர தாக்குதலில், கர்னல் ரேங்கில் உள்ள அதிகாரி விப்லாப் திரிபாதி, , அவரது மனைவி மற்றும் 7 வயது மகன் அவர்களுடன் பாதுகாப்புக்குச் சென்ற அசாம் ரைஃபில்ஸ் படை வீரர்கள் என 6 பேருமே இந்தத் தாக்குதல் படுகொலையாகினர்.

என்ன காரணம்
இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.மணிப்பூரில் அண்மைக் காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு மணிப்பூரில் உருவாகி உள்ள மக்கள் விடுதலை ராணுவம் என்ற பெயரில் உருவாகி உள்ள அமைப்பு காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இரங்கல்
இந்நிலையில் மணிப்பூரில் ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் " மணிப்பூரில் அசாம் ரைபில்ஸ் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை வண்மையாகக் கண்டிக்கிறேன். இதில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ராம்நாத் கோவிந்த் கண்டனம்
இதனிடையே இந்த கொடூர சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், இது கோழைத்தனமான தாக்குதல்; தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்துவதாக பதிவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தாங்கள் ஒற்றுமையாக நிற்பதாகவும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தேசம் நினைவு கூறும்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மணிப்பூரில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது நாட்டை காப்பதில் மோடி அரசு திராணியற்று உள்ளது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது என பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக்கொண்ட ராகுல், வீரர்களின் தியாகத்தை தேசம் நினைவுகூறும் என பதிவிட்டுள்ளார்.

கோழைத்தனம்
இதேபோல் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு எனது பணிவான அஞ்சலிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தியாகிகளின் தியாகத்தை தேசம் என்றும் நினைவுகூரும் என பதிவிட்டுள்ளார். மேலும், பயங்கரவாதிகளின் இந்த கோழைத்தனமான செயலுக்கு எதிராக நாடு முழுவதும் ஒன்றுபட்டுள்ளது எனவும் பிரியங்கா காந்தி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications