உ.பி.யை போலவே குஜராத்தில் புதிதாக பூமிக்கு வந்த சின்னஞ்சிறு சிசுகள் பலி... விசாரணைக்கு உத்தரவு
குஜராத் மாநிலம் அகமதாபாத் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் 9 பேர் இறந்ததை தொடர்ந்து அந்த சம்பவத்தில் விசாரணைக்கு மாநில முதல்வர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மருத்துவமனையில் பிறந்த 9 குழந்தைகள் பலியானதை தொடர்ந்து மாநில முதல்வர் விஜய் ரூபானி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 4 குழந்தைகள் பிறந்தன. அவை மிகவும் குறைந்த எடையுடன் இருந்ததால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. அதேபோல் லுனாவாடா, சுரேந்திரநகர், மன்சா, விரம்கம், ஹிம்மத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ வசதி கிடைக்காத எடைக்குறைவாக இருந்த 5 குழந்தைகளும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.

அப்போது அங்கு 9 குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்துவிட்டன. இதனால் குஜராத் மாநிலமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இந்த மருத்துவமனை நாட்டிலேயே பெரிய மற்றும் சிறந்த அரசு மருத்துவமனையாக உள்ளது. இங்கு பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் 100 படுக்கைகள் உள்ளன.
அத்தகைய மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. எடைக் குறைவினால் மிகவும் மோசமான நிலையில் வந்திருந்த குழந்தைகளும் ஏற்கெனவே இந்த மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளும் பலியாகிவிட்டன.
இந்த மருத்துவமனையில் பொதுவாக நாள்தோறும் 4 முதல் 5 குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கும் சம்பவங்கள் நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் குழந்தை இறப்புக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்தார்.
மேலும் குழந்தைகள் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 3 நபர்கள் கொண்ட குழுவை அமைத்த அவர் அதுகுறித்த விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்துக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
சின்னஞ்சிறு குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்ததற்கு நோய் தொற்று ஏதும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜன் இல்லாமல் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications