கூடுதலாக ரூ200 கோடி நிவாரணம்... மோடியிடம் ரங்கசாமி நேரில் வலியுறுத்தல்
டெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு ரூ200 கோடி கூடுதலாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அம்மாநில முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தை பாடாய்படுத்திய பெருமழை புதுச்சேரியையும் விட்டுவைக்கவில்லை. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுவைக்கு மத்திய அரசு ரூ182 கோடி நிதி உதவ வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பின்னர் 2வது கட்டமாக வெளுத்து வாங்கிய மழை வெள்ளத்தால் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் கட்டமாக ரூ50 கோடி நிதி உதவி வழங்கியது மத்திய அரசு.
இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட புதுவை, காரைக்காலில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.4 ஆயிரம், பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம், விவசாய பயிர்கள், ஆடு, மாடு, கோழிகளை இழந்தவர்களுக்கு என்று ரூ.150 கோடிக்கு நிவாரணங்களை ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி சென்ற ரங்கசாமி பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்தார். அப்போது புதுச்சேரி வெள்ள பாதிப்புகளை விவரித்த அவர், மத்திய அரசு ரூ200 கோடி வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை வலியுறுத்தினார்.