பதுக்கல்காரர்களிடம் இருந்து 82,000 டன் பருப்பு பறிமுதல்: துவரம் பருப்பு விலை குறைந்தது
டெல்லி: 12 மாநில அரசுகள் நடத்திய சோதனையில் 82 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் உளுந்து மற்றும் துவரம் பருப்பின் விலை சற்று குறைந்துள்ளது.
துவரம் பருப்பின் விலை ஒரேயடியாக அதிகரித்து கிலோ ரூ.210க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில 12 மாநில அரசுகள் 8 ஆயிரத்து 394 இடங்களில் பரிசோதனை செய்ததில் சுமார் 82 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து துவரம் பருப்பின் விலை இன்று ரூ.20 குறைந்து கிலோ ரூ.190க்கு விற்பனை செய்யப்பட்டது. உளுந்தம் பருப்பின் விலை கிலோவுக்கு ரூ.8 குறைந்து ரூ.190க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பருப்பு ஒரு வாரத்திற்குள் சில்லறை விற்பனை சந்தைக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் பருப்பின் விலை கணிசமாக குறையும்.
இருப்பதிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 57 ஆயிரத்து 455 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள மொத்தவியாபார சந்தைகளில் ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.200ல் இருந்து ரூ.152 ஆக குறைந்துள்ளது. இதே போன்று ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவிலும் பருப்பின் விலை குறையத் துவங்கியுள்ளது.
இதுவரை சத்தீஸ்கரில் 4 ஆயிரத்து 932 டன் பருப்பும், மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரத்து 370 டன்னும், ராஜஸ்தானில் 3 ஆயிரத்து 330 டன்னும், ஹரியானாவில் 2 ஆயிரத்து 189 டன் பருப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.