உச்சகட்ட காங். உட்கட்சி மோதல்- பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா!
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் உட்கட்சி மோதலின் உச்சமாக முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர்சிங் ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம், பாஜக ஆகியவை தனித்தனியே தேர்தலை எதிர்கொள்கின்றன.
பஞ்சாப் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. முதல் கட்டமாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத்சிங் சித்து நியமிக்கப்பட்டார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் காங்கிரஸ் மேலிடம் விரும்பியது.
ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
காங். தலைவராக சித்து
ஆனால் நவ்ஜோத்சிங் நியமனத்துக்கு தொடக்கம் முதலே மிக கடுமையான எதிர்ப்பை காட்டி வந்தார் முதல்வர் அமரீந்தர்சிங். இது தொடர்பாக டெல்லியில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதையடுத்து ஒருவழியாக சமாதானம் அடைந்தார் அமரீந்தர்சிங். இதனால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக மட்டும் நவ்ஜோத்சிங் சித்து நியமிக்கப்பட்டார். துணை முதல்வர் பதவி அவருக்கு வழங்கப்படவில்லை.
அமைச்சர்கள் எதிர்ப்பு
சித்துவின் நியமனத்துடன் உட்கட்சி பூசல் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்தது காங்கிரஸ் மேலிடம். ஆனால் சித்துவின் நியமனத்துக்குப் பின்னர்தான் பஞ்சாயத்து மிகப் பெரியதாக வெடித்தது. கேபினட் அமைச்சர் 4 பேர் முதல்வர் அமரீந்தர்சிங்கை மாற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக பஞ்சாப் காங்கிரஸ் விவகாரங்களுக்கான மேலிடப் பொறுப்பாளர் ஹரீஷ் ராகவத்தையும் சந்தித்து முறையிட்டனர்.
சித்து ஆதரவாளர்கள் போர்க்கொடி
இன்னொருபக்கம், தாம் சுதந்திரமாக செயல்பட இயலவில்லை என சித்து புகார் வாசித்தார். முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு எதிராக சித்துவின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக விமர்சனங்களையும் முன்வைத்தனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் சித்துவின் ஆலோசகர்களுக்கு டெல்லி மேலிடம் கடிவாளம் போட்டுப் பார்த்தது. ஆனாலும் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு கடும் எதிர்ப்பு தொடர்ந்து வந்தது.
அமரீந்தர்சிங் ராஜினாமா
இதனையடுத்து வேறுவழியே இல்லாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார் அமரீந்தர்சிங். இன்று பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார் அமரீந்தர்சிங். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக மேலிட பார்வையாளர்களாக ஹரீஷ் சவுத்ரி, அஜய் மக்கான், ஹரீஷ் ராவத் ஆகியோர் பஞ்சாப்பில் முகாமிட்டுள்ளனர்.
எம்.எல்.ஏக்கள் கூட்டம்
அமரீந்தர்சிங் ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வர் யார் என்கிற ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆகையால் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பை டெல்லி காங்கிரஸ் மேலிடம் விரைவில் வெளியிடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.