ஒடிஷா அரசுக்கு நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுடன் தொடர்பு: ராகுல் குற்றச்சாட்டு
சாலிபூர்: ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தள அரசுக்கும் நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒடிஷாவின் சாலிபூரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
ஒடிஷா மாநிலத்தில் இரும்பு, பாக்சைட் தாதுப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சுரங்கங்களில் கொள்ளையடித்த சிலர் மிகவும் வசதியாக இருக்கின்றனர். ஆனால் ஒடிஷா மக்களோ துன்பத்தில் உள்ளனர். மாநில அரசு, நிலக்கரி சுரங்க மாஃபியா கும்பலுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு ஊழல்களுக்கு பிஜூ ஜனதா தள கட்சியே பொறுப்பு. ஒடிஷா மாநிலத்துக்கு மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ஏராளமான நிதியை ஒதுக்கியது. ஆனால் அந்த நிதி எதுவும், அதன் பயனாளிகளுக்கு சென்றடையவில்லை.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு போன்று இதுவரை வேறு எந்த மத்திய அரசும் ஒடிஷா மாநிலத்துக்கு நிதி ஒதுக்கியது கிடையாது. ஒடிஷாவுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.5,000 கோடி வரை இன்னும் பயன்படுத்தப்படவில்லை.
ஒடிஸா மாநிலத்தில் 3,500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 10 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில் பிஜூ ஜனதாதள அரசை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.