கோஷ்டி அரசியல் வேண்டாம்.. ஒற்றுமையுடன் செயல்படுங்கள்..காங்.நிர்வாகிகளுக்கு ராகுல் அறிவுரை
அமேதி: கோஷ்டி அரசியலில் ஈடுபடுவோர் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேச தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரசும், கோஷ்டி பூசலும் எப்போதும் பிரிக்க முடியாதவை என்ற அளவில் ஒன்றுக்கொன்று பின்னிபிணைந்தே இருக்கும். பல நேரங்களில் கோஷ்டிபூசல் வெடித்தாலும், தேர்தல் நேரத்தில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். தமிழகம் மட்டுமல்ல கேரளா, உ.பி., பீகார் என பல்வேறு மாநிலங்களிலும் கோஷ்டி பூசல் நடந்து தான் வருகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் கட்சிகள் இப்போதே வரிந்துகட்டிக் கொண்டு தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரது மக்களவை தொகுதியான அமேதியில் நேற்று முன்தினம் அவர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் கோஷ்டி, கோஷ்டியாக செயல்படுகிறீர்கள். இப்படி தனித்தனியாக செயல்பட்டால் கட்சியை எப்படி வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியும்?
உங்களுக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை கைவிடுங்கள். ஒற்றுமையாக இருங்கள். நீங்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மற்ற கட்சிகளை கசக்கிப் பிழிந்து அவர்களுக்கு தோல்வியை ஏற்படுத்த முடியும். இதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள் என கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் விளக்குமாறு ராகுல் கேட்டுக்கொண்டார். எதிர்க் கட்சியினரின் பிரச்சாரங்களை எதிர்கொள்வது குறித்தும் அவர் விவாதித்தார்.