பிரதமர் பதவியை ஏற்க தயார்.. மோடியின் சித்தாந்தம் நாட்டுக்கு ஆபத்தானது: ராகுல்
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களைப் பெற்று எம்.பி.க்கள் தம்மை பிரதமராக தேர்ந்தெடுத்தால் அப்பதவியை ஏற்க தயார் என்று காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அத்துடன் நரேந்திர மோடியின் சித்தாந்தம் நாட்டுக்கு ஆபத்தானது என்றும் ராகுல் சாடியுள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு ஒரு விரிவான பேட்டி கொடுத்திருந்தார். அதன் பின்னர் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு தமது நிலைப்பாடுகள் இதுதான் என தெளிவாக பதில் கூறியிருக்கிறார் ராகுல் காந்தி.
ஹெட்லைன்ஸ் டுடேவுக்கு ராகுல் காந்தி அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
2004 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்துமே காங்கிரஸ் தோல்வியைத் தழுவும் என்றே கூறினர். அதாவது இந்தியா ஒளிரும் என்ற மார்க்கெடிங் பிரசாரமே முன் வைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டும் அப்படிதான் பிரசாரம் செய்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தனவே.. பாஜகவுக்கு மார்க்கெட் யுக்தி நன்றாகவே தெரியும்.. அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறது..
சித்தாந்தங்களை எதிர்க்கிறேன்
சித்தாந்தங்களை பின்பற்றுவோர் மற்றொரு சமூகத்துடன் மோதலை உருவாக்குபவராக இருக்கின்றனர். மோடியின் சித்தாந்தம் என்பது இந்தியாவுக்கு ஆபத்தானது. நான் சித்தாந்தங்களுக்கு எதிராக போராடுகிறேன்.. அதாவது ஒட்டுமொத்த நாட்டின் வளமே ஓரிரு தொழிலதிபர்களுக்காக என்கிற சித்தாந்தங்களை எதிர்த்து போராடுகிறேன். எந்த ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தெல்லாம் விமர்சிக்கவிரும்பவில்லை.
சமாஜ்வாடிக்கு எதிராக
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியை நாங்கள் எதிர்கொள்கிறோம். அவர்களுடன் கூட்டணி எதுவும் இல்லை.. எந்த ஒரு அடிப்படைவாதமுமே இந்தியாவுக்கு ஆபத்தானதே.. சமூக நல்லிணக்கம் மூலமே இந்தியாவை முன்னேற்ற முடியும். நாங்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சி செலுத்தி வளர்ச்சியை உருவாக்கியிருக்கிறோம். 15 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம். இங்கே மார்க்கெட்டிங் போன்ற விவகாரங்களுக்கு இடமில்லை. நாங்கள் மக்களின் வலிகளை உணர்ந்திருக்கிறோம்.
ஊழல் ஒழிப்பு
ஊழல் என்பது இந்தியாவின் யதார்த்தமாகிவிட்டது. நாம் ஊழலைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு அதை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் ஊழலை எதிர்த்துப் போராடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதை எப்படி எதிர்த்துப் போராடுகிறோம் என்ற செயல் திட்டம் பாஜகவிடத்தில் இல்லையே..
கார்ப்பரேட் கட்சி.. அதிகாரக் குவிப்பு
காங்கிரஸ் கட்சி மக்கள் பலத்தை அடிப்படையாகக் கொண்டது. பாரதிய ஜனதா கட்சியோ கார்ப்பரேட் பலத்தைக் கொண்டது. நாங்கள் அதிகாரத்தை தனிநபர் ஒருவரிடம் குவித்து வைத்திருக்கக் கூடாது என்கிறோம். ஆனால் பாஜகவோ ஒரு தனிநபரிடம்தான் அதிகாரங்கள் குவிக்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறது.
ஒருசில தொழிலதிபர்களுக்காகத்தான் குஜராத் அரசு..
நான் அந்த தொழிலதிபரின் பெயரை சொல்லவில்லை.. அவரது சொத்து மதிப்பு ரூ3 ஆயிரம் கோடியில் இருந்து ரூ40 ஆயிரம் கோடியாக திடீரென உயர்ந்துள்ளது. வதோதராவில் ரூ300 கோடி மதிப்பிலான நிலம் அவருக்குக் கொடுக்கப்பட்ட பின்னர்தான் இப்படி எல்லாமே நடந்துள்ளது. நான் குஜராத்தின் வைரம் வெட்டும் தொழிலாளர்களிடையே கலந்துரையாடினேன்.. அவர்களது குழந்தைகள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கின்றனர்..
குஜராத் மாநிலத்தில் தொழிலாளர்கள் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது, அந்த மாநிலத்தில் ஜவுளித்தொழிலே நலிவடைந்து அழிந்தேபோய்விட்டது. விவசாயிகள் கதறுகிறார்கள். ஆனாலும் டிவி போன்ற ஊடகங்களில் அந்த மாநில அரசு 'குஜராத் முன் மாதிரி' பற்றி பேசுகிற 'மார்க்கெட்டிங்' யுக்தியை கையாள்கிறது. குஜராத் மாநில அரசு ஒன்றிரண்டு தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது.. அது யாரென்று எல்லோருக்கும் தெரியுமே.. (அதானி, அம்பானி)
கட்சி வேட்பாளர்கள்
நமது அரசியல் கட்சிகளின் மனோபாவமே மாற வேண்டும். கட்சிகளின் வேட்பாளர்களை யார் தேர்ந்தெடுப்பது? கட்சிகளின் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஜனநாயகப்படுத்த வேண்டும்.
யார் பிரதமர்?
நமது அரசியல் அமைப்பின்படி தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள்தான் நாட்டின் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். பிரதமர் வேட்பாளர்கள் என்று அறிவிப்பதெல்லாம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. நாளை காங்கிரஸ் கட்சி தேர்தலில் வென்று எங்கள் எம்.பி.க்கள் என்னை பிரதமராக தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக அதை ஏற்பேனே தவிர பின்வாங்க மாட்டேன்.
எதிர்ப்பு அலை
மத்திய அரசுக்கு எதிராக சிறிய எதிர்ப்பு அலை உருவாகியிருப்பது உண்மைதான். அதை நாங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி அந்த பேட்ட்டியில் கூறியுள்ளார்.