லோக்சபாவில் கடுமையான அமளிக்கிடையே மீண்டும் தூங்கி விழுந்த ராகுல் காந்தி
டெல்லி: லோக்சபாவில் குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் கடுமையான அமளி ஏற்பட்டபோது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தூங்கி விழுந்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் உனாவில் தலித் இளைஞர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக லோக்சபாவில்காங்கிரஸ் - பாரதிய ஜனதா இடையே கடுமையான மோதல் நடைபெற்றுக் கொண்டு இருந்தது.
அப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தூங்கும் காட்சி நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ராகுல் காந்தியின் இந்நடவடிக்கையானது எதிர்க்கட்சிகளை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கிவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பேசுகையில், லோக்சபாவில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விவாதம் நடைபெற்ற போது ராகுல் காந்தி தூங்குகிறார். இவ்விவகாரத்தில் காங்கிரஸ் எப்படி தீவிரமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது என்றார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, காங்கிரஸ் கட்சியின் மனநிலை மற்றும் அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை இது காட்டுகிறது. அவர்கள் காரணம் இல்லாமல் கூச்சலிடுகின்றனர், நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றனர். அவர்களுடைய தலைவர் லோக்சபாவிலேயே தூங்குகிறார் என்றார்.
ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரியோ, ராகுல் காந்தி கீழே பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் தூங்கவில்லை. சபையில் பெருமளவு அமளி ஏற்படும் போது எப்படி ஒருவரால் தூங்க முடியும்? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட உனாவிற்கு ராகுல் காந்தி நாளை சென்று ஆறுதல் கூற இருக்கிறார்.
லோக்சபாவில் ஏற்கனவே ராகுல் காந்தி தூங்கி விழுந்தததாக சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
(அனல் பறக்க நடந்த விவாதத்திற்கு மத்தியில் கையை தலைக்கு அண்டக் கொடுத்து தூங்கிய ராகுல் காந்தி...!)