கிஸ் ஆப் லவ், ஹக் ஆப் லவ் வரிசையில்... கேரளாவில் நடந்த ‘டச் ஆப் லவ்’ பிரச்சாரம் !
திருவனந்தபுரம்: முதியவர்களுக்கு சமூகத்தில் அன்பும், அனுசரணையும் தேவை என்பதை வலியுறுத்தி கேரளாவில் 'டச் ஆப் லவ்' என்ற பிரச்சாரம் நடத்தப்பட்டது.
சமீபகாலமாக கேரளாவில் நடைபெற்ற கிஸ் ஆஃப் லவ் (முத்தப் போராட்டம்), ஹக் ஆஃப் லவ் ( கட்டிபிடிக்கும் போராட்டம்) போன்ற போராட்டங்கள் சர்ச்சையை உண்டாக்கியது.
இந்நிலையில், கொச்சி நகரில் மெரைன் டிரைவ் பகுதியில் நேற்று டச் ஆப் லவ் என்ற பிரச்சாரம் ஒன்று நடத்தப்பட்டது. கொச்சி மாநகராட்சி கவுன்சில் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், மனித நல ஆர்வலர்கள், சில அரசியல் பிரமுகர்கள் ஒன்றிணைந்து இந்த பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் கொச்சி நகரைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் பலர் பங்கேற்றனர். அவர்களில் பலர் முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.
இந்த பிரச்சாரத்தின் நோக்கம் வயதானவர்களுக்கு அன்பும், அனுசரணையும் தேவை என்பதை சமூகத்துக்கு உணர்த்துவதே ஆகும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும், ‘முதியோர்களுக்கு அன்பும், பாதுகாப்பான வசிப்பிடமும் அவசியம். கடைசி நாட்களில் அவர்கள் உறவுகளோடு இருத்தல் அவசியம். அவர்களை பிள்ளைகளோ அல்லது மற்ற உறவினர்களோ புறக்கணித்து முதியோர் இல்லத்தில் விட்டுவிடுவது மிகவும் தவறானது' என இந்தப் பிரச்சாரத்தில் வலியுறுத்தப் பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவர்களுக்கு பாத பூஜை செய்யப் பட்டு, பின்னர் சால்வைகள் பரிசளிக்கப் பட்டது.