இந்தியா, நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
டெல்லி: இந்தியா மற்றும் நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்குக் காரணம் மக்கள் தொகையில் அடர்த்தி அதிகமாக இருப்பதுதான் என்றும் கூறியுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25ம்தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்திய மாநிலங்களிலும் எதிரொலித்தது.
இந்தியா - நேபாள எல்லைப்பகுதிகளில் வசித்தவர்களும் உயிரிழந்தனர். தொடர்ந்து அவ்வப்போது லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
விஞ்ஞானிகள் ஆய்வு
நேபாள நிலநடுக்கத்திற்கு பிறகு காத்மண்டுவில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நில அதிர்வுகள் குறித்து உலகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ள முக்கிய புவிஆராய்ச்சி மையங்கள் வாயிலாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, செயற்கைக்கோள் மூலம் சேகரிக்கப்பட்ட ரேடார் காட்சிகளையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இமயமலையில் நிலப்பரப்பு
அதனடிப்படையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு இமயமலைப்பகுதியில் உள்ள நிலப்பரப்பின் மேல் தட்டு நகர்ந்துள்ளதாகவும், இதில் பெரும்பகுதி ஒருபுறமாக இறுகியிருப்பதால் திடீரென எப்போது வேண்டுமானாலும் அந்த அழுத்தமானது விடுவிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
எப்போது ஏற்படும்?
இந்த அழுத்தமானது ஒரு மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், எப்போது இந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பதை உறுதியாகக் கூற இயலாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்திற்கு காரணம்
இதனிடையே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜீன் பிலிப் ஆவோவாக் சமீபத்தில் நிலநடுக்கம் தொடர்பான ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் தொகையின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் வட இந்தியாவின் கங்கை சமவெளி பகுதியிலும், நேபாளத்தின் மேற்கு பகுதியிலும் எதிர்காலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.