ரயில்னா நாலு எலி இருக்கத்தானே செய்யும்... சொல்வது ரயில்வே அமைச்சர்!
டெல்லி: ரயில் பெட்டிகளில் எலிகள் நடமாட்டம் இருப்பது உண்மைதான் என்று ரயில்வே துறை ஒப்புக் கொண்டுள்ளது.
ரயில்களில் புளிச்சுப் போன தயிர் சாதம், ஊசிப் போனா சாம்பார் சாதம், வயிற்றைக் குமட்ட வைக்கும் இதர உணவுப் பதார்த்தங்கள் மட்டும்தான் சகஜம் என்றில்லை.
மூட்டைப் பூச்சி, கரப்பான், எலி போன்ற உயிரினங்களும் சரளமாகவே புழங்கி வருகின்றன. இதுதொடர்பாக பயணிகள் காட்டுக் கத்தல் கத்தியும் இதை சரி செய்யும் வழியைக் காணோம்.
ஆமா சாமி
இந்த நிலையில் ரயில் பெட்டிகளில் எலித் தொல்லை இருப்பதாக ரயில்வே துறை இப்போதுதான் ஒத்துக் கொண்டுள்ளது.
லோக்சபாவில் ஒத்துக் கொண்ட அமைச்சர்
ரயில்களில் எலித் தொல்லை குறித்து புகார்கள் வந்திருப்பதாகவும், எலித் தொல்லை இருப்பது உண்மைதான் என்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா இன்று லோக்சபாவில் ஒத்துக் கொண்டார்.
எலி பிடிக்க ஏற்பாடு
ரயில்களில் எலித் தொல்லையைக் குறைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே செய்து வருவதாகவும் அமைச்சர் சின்ஹா தெரிவித்தார்.
எலி மருந்து வைக்க நடவடிக்கை
எலிகளை ஒழிக்க உரிய எலி மருந்து உள்ளிட்ட நடவடிக்கைகளை உரிய துறையினர் செய்து வருவதாகவும், குறிப்பிட்ட காலஇடைவெளியில் இது நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கேன்டீன் பெட்டிகள்
எலி மருந்து அடிக்கும் நடவடிக்கையின்போது கேன்டீன் உள்ள பெட்டியில் உணவுப் பதார்த்தங்கள் எதுவும் இல்லாதது போல பார்த்துக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
சரியா மருந்தடிக்காட்டி அபராதம்
எலி மருந்து அடிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் அதை சரியாக செய்யாவிட்டால் உரிய அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
என்னத்தச் செஞ்சு என்னத்த போங்க!