செத்துக் கொண்டிருந்த நடிகையைக் காக்காமல் வாக்குமூலம் பெற்றது ஏன்?.. சிக்கலில் ரூம் மேட்
மும்பை: மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் பாலிவுட் நடிகை ஷீகா ஜோஷியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷீகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அவரை பேசச்சொல்லி ரெக்கார்ட் செய்தது ஏன் என போலீசாரும் ஷீகாவின் தோழியிடம் மது பாரதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘பி.ஏ. பாஸ்' என்ற படத்தில் முன்னணி நடிகை ஷில்பா சுக்லாவுடன் நடித்தவர், நடிகை ஷீகா ஜோஷி (40). மாடல் அழகியாக இருந்து சினிமா நடிகையாக மாறிய ஷீகா, தொடர்ந்து துணை நடிகையாக நடித்து வந்தார். மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்த தனது தோழி மது பாரதி குடும்பத்துடன் கடந்த சில மாதங்களாக அவர் தங்கி இருந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று உட்புறமாக பூட்டிய பாத்ரூமுக்குள் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் தோழியால் மீட்கப் பட்டார் ஷீகா. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஷீகா, உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஷீகாவின் அருகில் அவர் தற்கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் கண்டெடுக்கப் பட்டது.
ஷீகாவின் கடைசி நிமிடங்களின் போது உடனிருந்த அவரது தோழி, ஷீகா பேசியதாக தன் செல்போனில் பதிவு செய்த குரலை போலீசில் அளித்தார். தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதாலேயே ஷீகாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக அவர் போலீசில் தெரிவித்திருந்தார். அதில் டாக்டரின் பாலியல் தொல்லை காரணமாகவே தான் தற்கொலைக்கு முயற்சித்ததாக ஷீகா கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆண்கள் மீது தனக்கு வெறுப்பு வந்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், ஷீகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஷீகாவின் மரணத்தைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஷீகாவைக் காப்பாற்ற அக்கம்பக்கத்தாரின் உதவியை நாடாமல், உடனடியாக அவரை மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லாமல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, போலீசாரும் ஷீகாவின் தோழியிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு சிகிச்சைக்காகச் சென்ற மருத்துவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறி, அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினார் ஷீகா. இது தொடர்பாக ஷீகா மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.