பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பு கோரிக்கை!
திருவனந்தபுரம்: பகவத் கீதையை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் சார்பு அமைப்பான பாரதிய விஷார கேந்திரம் கோரிக்கை விடுத்துள்ளது.
குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தவே, பகவத் கீதையை பள்ளிக்கூடங்களில் கற்பிக்க வேண்டும் என்றார். மேலும் தான் சர்வாதிகாரியாக இருந்தால் பகவத் கீதையை பள்ளிக்கூடங்களில் கட்டாயபாடமாக்க உத்தரவு பிறப்பித்திருப்பேன் என்றார்.
இதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கட்ஜூ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய விஷார கேந்திரத்தின் தலைவர் பரமேஸ்வரன், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நீதிபதி தவேயின் கருத்து மிகவும் சரியானதுதான். பகதவ் கீதையை மகாத்மா காந்தி தாய் போல கருதினார். நமது விடுதலைப் போராட்டத்துக்கும் உதவியது பகவத் கீதைதான். இதனால் நாட்டின் தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்றும் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.