மோடி அரசின் பொருளாதார கொள்கைகள்- ஆர்.எஸ்.எஸ். கடும் அதிருப்தி
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
பாரதிய ஜனதாவின் புதிய தலைவரான அமித்ஷா அண்மையில் ஆர்.எஸ்.எஸ்.இயக்க மூத்த தலைவர்களை டெல்லி மற்றும் நாக்பூரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளின் போது மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்த அதிருப்தியை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அமித்ஷாவிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். உத்தர்காண்ட் சட்டசபை இடைத் தேர்தலில் 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சியே கைப்பற்றியிருப்பதை சுட்டிக் காட்டி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்தடுத்த சட்டசபை தேர்தல்களிலும் பாரதிய ஜனதாவுக்கு தோல்வி ஏற்படக் கூடும் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
தேர்தலுக்கு முந்தைய சர்வே ஒன்றில் பொதுமக்கள் விலைவாசி உயர்வு குறித்துதான் அதிகம் கவலைப்படுவதாக தெரிவித்திருந்ததையும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சுட்டிக்காட்டி, அதை கட்டுப்படுத்தாவிட்டால் மக்கள் அதிருப்தி அடைவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.