பெங்களூரு சிறையில் மவுன விரத நாடகத்தை திடீரென முடித்த சசிகலா!
பெங்களூரு சிறையில் சசிகலா மவுன விரதத்தை இன்று முடித்துக் கொண்டார்.
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா பெங்களூரு சிறையில் 2 மாதங்களுக்கு மேலாக கடைபிடித்து வந்த மவுன விரதத்தை இன்று முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி முதல் சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

சசிகலாவுக்கு வசதிகள்
சிறையில் இருந்தாலும் சசிகலா வெளியே சுதந்திரமாக நடமாடி ஷாப்பிங் மால்களுக்கு சென்று திரும்பும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இது தொடர்பாக விசாரணைகளும் நடைபெற்றன

ஜெ. நினைவு நாளில் மவுன விரதம்
ஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5-ந் தேதி முதல் திடீரென மவுன விரதம் இருக்கத் தொடங்கினார் சசிகலா. பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் இத்தகவலை தெரிவித்திருந்தார்.

ஐடி அதிகாரிகளுக்கு பதில்
அண்மையில் சசிகலா குடும்ப வீடுகள், நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் மவுன விரதம் இருப்பதாக சசிகலா கூறியிருந்தார்.

சசிகலா மவுன விரதம் முடிவு
இந்நிலையில் சசிகலா இன்று திடீரென மவுன விரதத்தை முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை தீவிரமடையும் நிலையில் சசிகலா மவுன விரதத்தை முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications