சசிகலா முதல்வரானால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது - சசிகலா புஷ்பா
தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்றால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பிரதமர், ஆளுநர் ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று சசிகலா புஷ்பா மனு அளித்துள்ளார்.
டெல்லி: தமிழக முதல்வராக சசிகலா விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இதனை எதிர்த்து, சசிகலா புஷ்பா பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கும் மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
சசிகலா புஷ்பா அனுப்பியுள்ள மனுவில், அதிமுக பொதுச்செயலராக தேர்வுசெய்யப்பட்ட சசிகலா, அதிமுக-வின் சட்டசபைக் குழுத் தலைவராகவும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் எனக் கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.
சசிகலா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அடிப்படையில் அவர் எந்த கட்சிப் பணியும் செய்ததில்லை. தவிர, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்றபோதும், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், தற்காலிக முதல்வராக அவர் நியமிக்கப்படவில்லை.
சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்றால், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கும். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பிரதமர், ஆளுநர் ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சசிகலா முதல்வர் பதவியில் அமர்வதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.