இரட்டை இலைச் சின்னம் விவகாரம்: ஆவணங்கள் ஒப்படைக்க தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் கோரியது சசிகலா தரப்பு!
இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு அவகாசம் கோரியுள்ளது.
டெல்லி: இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு அவகாசம் கோரியுள்ளது. இதுதொடர்பான மனுவை தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு அளித்துள்ளது.
அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டிக்காரணமாக ஏற்பட்ட மோதலால் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து எம்எல்ஏக்களின் ஆதரவால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றது.
இதனால் ஆட்சியும் கட்சியும் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் சென்றது. எப்படியாவது கட்சியை சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க வேண்டும் என எண்ணிய ஓபிஎஸ் தரப்பு அதற்கான பணிகளில் ஈடுபட்டது.

போட்டி போட்ட அணிகள்
இதைத்தொடர்ந்து சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு புகார் அளித்தது. அதற்குள் ஆர்கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இரு அணிகளும் தாங்களே உண்மையான அதிமுக என கூறி இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டி போட்டன.

இரட்டை இலை முடக்கம்
இதையடுத்து இரட்டை இலைச்சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் கடந்த 22ஆம் தேதி அறிவித்தது. மேலும் கட்சியின் பெயரையும், கட்சிக் கொடியையும் இரு அணியினரும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் ரத்து
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதால் ஆர்கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளும் இரட்டை இலைச்சின்னத்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

எண்ணிக்கையை கூட்ட முயற்சி
ஏற்கனவே 40 லட்சம் பேருக்கு மேல் தங்களுக்கு ஆதரவு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியினர் தெரிவித்திருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கையை 1 கோடியாக அதிகரிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவகாசம் கேட்கும் சசி குரூப்
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என சசிகலா தரப்பு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளது. அ.தி.மு.க அம்மா அணி சார்பில் 8 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications