சி.பி.ஐ. விசாரிக்காத வழக்கின் ஆயுள் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி!
டெல்லி: ஆயுள் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்ய 2014ஆம் ஆண்டு பிறப்பித்த தடையை நீக்கி இடைக்கால உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம் . மேலும் சி.பி.ஐ. விசாரிக்காத வழக்குகளின் ஆயுள் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவின் மீது கருத்து தெரிவிக்க வேண்டிய மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்குப் போய் ரிட் மனுவைத் தாக்கல் செய்தது.
இதனால் 7 தமிழர் விடுதலைக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. பின்னர் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.
இந்த பெஞ்ச் முன்பாக கடந்த 15-ந் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக அரசைப் பொறுத்தவரையில் ராஜிவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்த போதும் தமிழக அரசுதான் சி.பி.ஐ.க்கு மாற்றிக் கொடுத்தது; அதனால் சி.பி.ஐ.க்குதான் கைதிகளை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் உள்ளது என கூறுவது தவறு என்று வாதிட்டு வருகிறது.
மேலும் அரசியல் சாசனத்தில் அளித்துள்ள உரிமைகளின் படி மாநில அரசுகளுக்கு ஆயுள் கைதிகளை விடுவிக்க உரிமை என்றும் வாதிட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசோ, ராஜிவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது; இவர்கள் கொடும் குற்றம் புரிந்தவர்கள்; ஆகையால் விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே என்று வாதிட்டு வருகிறது.
SC modifies its July 7, 2014 order and allows state govts with certain conditions to exercise power of remission to release life convicts.
— Press Trust of India (@PTI_News) July 23, 2015
இருதரப்பு வாதங்களையும் முன்வைத்து ஒரு இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
- ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்வதற்கு 2014ஆம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி மாற்றி அமைக்கப்படுகிறது.
- ஆனால் சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசுகளால் விடுவிக்க முடியாது.
- அதேபோல் கொடுங்குற்றம் செய்து ஆயுள் தண்டனை பெற்றோரையும் மாநில அரசுகள் விடுவிக்க முடியாது
- தடா, ஆயுத சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்றோரையும் மாநிலகள் அரசு விடுவிக்க முடியாது
- தீர்ப்புகளில் ஆயுள் முழுவதும் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தால் அவர்களையும் மாநில அரசுகள் விடுவிக்க முடியாது.
- சாதாரண வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை மாநில அரசுகள் விடுதலை செய்யலாம்.
ராஜிவ் வழக்குக்குப் பொருந்தாது
அதே நேரத்தில் இந்த உத்தரவு ராஜிவ் கொலை வழக்குக்குப் பொருந்தாது என்றும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. ராஜிவ் வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.