அருணாச்சல் பிரதேசத்தில் புதிய ஆட்சி அமைக்கலாம்- சுப்ரீம் கோர்ட் அனுமதி
டெல்லி: அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் புதிய ஆட்சியமைக்கும் நடைமுறைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக விதித்திருந்த இடைக்காலத் தடையை அது இன்று விலக்கிக் கொண்டது. முன்னதாக புதிய அரசை அமைக்கும் வகையில் அங்கு அமலாக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. தற்போது அந்தத் தடையை உச்சநீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.

அருணாச்சல பிரதேச முதல்வராக இருந்த நபம் துகிக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் சில எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பலம் இழந்தது.
காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இந்த களேபரங்களுக்குப் பின்னர் 26 எம்.எல்.ஏ.க்கள்தான் முதல்வர் நபம் துகியை ஆதரித்தனர். அதே நேரத்தில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பலம் 34 ஆனது. இதனால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 25-ந் தேதி அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் உச்சநீதிமன்றத்திடம் சரமாரியாக கண்டனங்களை வாங்கி வந்தது மத்திய அரசு. இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு புதிய அரசு ஒன்றை அமைத்து ஜனாதிபதி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டால் உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களில் இருந்து தப்பிக்க முடியும் என மத்திய அரசு முடிவு செய்தது.
இதனால் அருணாச்சலில் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதற்கான பரிந்துரையை மத்திய அமைச்சரவை நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தலையிட்டு, அருணாச்சலப் பிரதேசத்தில் நாளை வரை (அதாவது இன்று வரை) தற்போதைய நிலைமையே நீடிக்க வேண்டும்; 14 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனால் மத்திய அரசின் முயற்சிக்கு அங்கு முட்டுக்கட்டை விழுந்தது. ஆனால் இன்று புதிய உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம், புதிய அரசு அமைக்கும் நடவடிக்கைக்குப் பிறப்பித்த தடையை விலக்கிக் கொண்டது. இதன் மூலம் அங்கு புதிய அரசை அமைக்க தடை நீங்கியுள்ளது.
மேலும் 14 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு விதிக்கப்பட்ட தகுதி நீக்கம் தொடர்பான குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தான் தலையிட விரும்பவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறி விட்டது. இந்த விவகாரத்தில் 2 வாரத்திற்குள் விசாரணை நடத்தி முடிவை அறிவிக்குமாறு குவஹாத்தி உயர்நீதிமன்றத்திற்கு அது உத்தரவிட்டுள்ளது.
இது பாஜகவுக்கு சாதகமாகவும், காங்கிரஸுக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
இன்றைய விசாரணையின்போது அருணாச்சல் பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்களான பாலி நாரிமன் மற்றும் கபில் சிபல் ஆகியோர் ஆஜரானார்கள்.












Click it and Unblock the Notifications